போலீஸ் அரசியல்வாதிகளையும் வேவு பார்க்கிறதா? ஐஜிபியைக் கேட்கிறார் எம்பி

issueபோலீஸ்  சிறப்புப்  பிரிவு(எஸ்பி)  அரசியல்வாதிகளையும்  சமூக  ஆர்வலர்களையும்கூட  உளவு  பார்க்கிறதா  என்பதை  போலீஸ்படைத் தலைவர்  காலிட்  அபு  பக்கார்  விளக்க  வேண்டும்  என  டிஏபி  எம்பி  ஒருவர்  கோரிக்கை  விடுத்துள்ளார்.

ஜோகூர்  இளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம் வேவுபார்க்கப்படுவதாகக்  கூறப்பட்ட  விவகாரத்தை  ஒரு  தப்பான  புரிதல்  என  காலிட்  அறிவித்திருப்பது  திருப்தி  அளிக்கவில்லை  என்று  லியு  சின்  தொங்  கூறினார்.

போலீஸ் தலைவரின்  கூற்று துங்கு  இஸ்மாயிலின்  தொலைபேசி  ஒட்டுக்கேட்கப்பட்டதா அவரின்  செயல்கள்  கண்காணிக்கப்பட்டு  வந்தனவா  என்பதை   விளக்கவில்லை  என்றாரவர்.

சிறப்புப்  பிரிவு  உண்மையிலேயே  பட்டத்திளவரசரை  வேவுபார்த்து  வந்திருந்தால்  எந்தச்  சட்ட  அடிப்படையில்  அவ்வாறு  செய்யப்பட்டது  என்பதை  காலிட்  விளக்க  வேண்டும்.

“துங்கு  இஸ்மாயிலையும்  அவரின்  தந்தையையும்  அரசியல்வாதிகளையும்  கண்காணிப்பது  அரசியல்  நொக்கத்துக்காக  போலீஸ்  அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்துவதாகும்.

“இது  மக்கள்  நலன்  சம்பந்தப்பட்ட  விவகாரம். இதைப் பற்றி  மக்களுக்குப் பொறுப்பான  முறையில்  விளக்கமளிக்காமல்  இரகசியமாக ‘பேசித்தீர்த்துக்கொள்வது’  முறையாகாது”, என்றாரவர்.

நேற்று,  இளவரசரசைச்  சென்று  கண்டதாகவும்  இவ்விவகாரத்துக்குத்  தீர்வு  காணப்பட்டு  விட்டதாகவும்  காலிட்  கூறியிருந்தார்.