1976 வழக்குரைஞர் தொழில் சட்ட(எல்பிஏ)த்துக்கான உத்தேச திருத்தங்களைப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் தற்காத்துப் பேசினார். அத்திருத்தங்கள் மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் சுதந்திரத்துக்குக் குழிபறிக்கும் எனப் பலராலும் குறைகூறப்பட்டிருக்கிறது.
“வழக்குரைஞர் மன்றத்தில் தலையிடும் நோக்கத்தில்தான் அரசாங்கம் எல்பிஏக்கு உத்தேச திருத்தங்களைக் கொண்டு வருகிறது என்று பல தரப்பினரும் விடுத்துள்ள அறிக்கைகளில் உண்மையில்லை”, எனப் புதிதாக சட்ட அமைச்சராய் நியமிக்கப்பட்டிருக்கும் அஸலினா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
திருத்தங்கள் செய்யப்பட்டு முடிக்கவில்லை அதற்குள் வெளியார் அறிக்கைகள் விடுவதன் மூலமாக இவ்விவகாரத்தில் தலையிடுவது நியாயமல்ல என்று அஸலினா கூறினார்.
உத்தேச திருத்தம் அமைச்சரவை, நாடாளுமன்றம் எனப் பல கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமுன் வழக்குரைஞர் மன்றம் உள்பட பல தரப்புகளுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது என்றார்.