சபாக் பெர்ணத்தில் பெர்சே ஆதரவாளர்களை சிவப்புச் சட்டையினர் தாக்கினர்

 

redthuggsஇன்று சபாக் பெர்ணத்தில் பெர்சே டி-சட்டை அணிந்திருந்த இருவரை சிவப்புச் சட்டையினர் முட்டைகளைக் கொண்டு தாக்கினர்.

அந்த இரு மோட்டோர்சைக்கிள்காரர்களும் சாலையைத் தாண்டி சிவப்புச் சட்டையினர் இருந்த பகுதிக்குச் சென்ற போது தாக்கப்பட்டனர்.

அவ்விருவரும் முட்டைகளால் தாக்கப்பட்ட பின்னர் சிவப்புச் சட்டையினரை அணுகினர் என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.

ஆனால், வீட்டிற்கு போக விரும்பிய அவ்விருவரும் சிவப்புச் சட்டையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சாலை வழியாக போக தீர்மானித்தனர் என்று போலீசார் கூறினர்.

சிவப்புச் சட்டையினரை அணுகிய பின்னர் அவ்விருவரில் ஒருவர் பின்வாங்கினார். இன்னொருவரின் மோட்டார்சைக்கிள் விழுந்து நொருங்கி விட்டது. ஆனால், அவர் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் இன்னும் அதிகமான முட்டைகளால் தாக்கப்பட்டார்.

ஒரு சிவப்புச் சட்டைக்காரர் அவரை பின்புறத்தில் உதைத்தால் அவர் தலைக்குப்புற விழுந்தார். பின்னர், ஒரு போலீஸ்காரர் அவருக்கு உதவினார்.

அவ்விரு மோட்டார்சைக்கிள்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களும், கலகத் தடுப்பு போலீசார் உட்பட, முட்டைகளைக் கொண்டு தாக்கப்பட்டனர்.

இதற்கு முன்னதாக, பெர்சே சபாக் பெர்ணத்தில் நுழைவதைத் தடுப்போம் என்று சிவப்புச் சட்டையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவப்புச் சட்டை கூட்டத்தின் தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் முட்டை தாக்குதல் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்றார்.

“நல்ல வேளை, அவர்கள் முட்டைகளை வீசினர். கற்களை வீசி இருந்தால் என்னவாயிருக்கும்?, என்றாரவர்.

மோட்டார்சைக்கிள்காரர்கள் தாக்கப்பட்டதை தற்காத்து பேசிய ஜமால், இது சிவப்புச் சட்டைக்காரர்கள் பகுதி என்று தெரிந்தும் எங்களை சீண்டுவதற்காக இங்கு வந்தனர் என்றாரவர்.

என்ன நடந்தாலும் நாங்கள் அதற்கு பொறுப்பில்லை என்று கூறிய ஜமால், பெர்சே இல்லாமல் இருந்தால் இது நடந்திருக்காது என்று மேலும் கூறினார்.

இதனிடையே, சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அஸ்மி இசா முட்டைகளைக் கொண்டு தாக்கப்பட்டது பற்றி விசாரணை தேவையில்லை ஏனென்றால் எவரும் காயப்படவில்லை என்றார்.

குறும்புத்தனமாக நடந்து கொண்டதற்காக மூன்று சிவப்புச் சட்டையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றாரவர். இருப்பினும், அவர்கள் எவ்வித குற்றமும் புரியவில்லை என்றும் அவர் கூறினார்.

உதைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.