பஹசா மலேசியா பேசத் தெரியாதவர்களின் குடியுரிமையைப் பறிப்பது பெர்சத்துவின் கொள்கையாக இருக்குமா?

 

ShahruddinBersatuபார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆட்சிக்கு வந்தால் அது   தேசிய மொழியை நன்கு அறிந்திராவர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதை அரசாங்க கொள்கையாக்குமா என்று டிஎபி ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹவ் கேட்டுள்ளார்.

இக்கேள்வியை அவர் எழுப்பியதற்கு காரணம் ஈராண்டுகளுக்கு முன்பு இவ்வாறான ஆலோசனை ஒன்றை தெரிவித்த ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் ஷாருடின் சாலே இப்புதிய அரசியல் கட்சியின் தலைமைச் செயலாளராக கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

“பஹசா மலேசியா தேர்வில் வெற்றி பெறாத அனைத்து மாணவர்களின், மலாய் மாணவர்கள் உட்பட, குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் பல தடவைகளில் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

“ஆட்சிக்கு வந்தால், இது பெர்சத்துவின் புதியதோர் கொள்கையாக இருக்குமா? இப்படிப்பட்ட வெறித்தனமான சொற்சிலம்பத்துடன் நாம் எப்படி ஒன்றிணைந்து வேலை செய்ய முடியும்?, என்று டாக்டர் பூ வினவினார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்மை நாம் ஆதரிக்கிறோம் ஏனென்றால் பிகேஆர் மலாய்க்காரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அனைத்து மலேசியர்களுக்குமான ஒரு பல்லினக் கட்சி என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

ஷாருடின் கடந்த வாரம் அம்னோவிலிருந்து பெர்சத்துக்கு தாவினார்.