வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் முதல் மாநாட்டில் முன்னாள் பிரதமரும் பெர்சத்துவின் தலைவருமான மகாதிர் முகம்மட் சிறப்புரை ஆற்றுவார் என்று ஹரப்பான் தலைமைச் செயலாளர் சைபுடன் அப்துல்லா தெரிவித்தார்.
அம்மாநாடு எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் நேரடிப் போட்டியை உறுதிசெய்வதற்காக ஒரு மாபெரும் எதிரணியை அமைப்பது குறித்து விவாதிக்கும் என்றாரவர்.
பிகேஆர், டிஎபி மற்றும் அமனா ஆகிய கட்சிகளின் 1000 பேராளர்கள் அம்மாநாட்டில் பங்கேற்பர். பெர்சத்துவின் பிரசிடெண்ட் முகைதின் யாசின், டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் மற்றும் அமனா தலைவர் முகமட் சாபு ஆகியோர் உரையாற்றுவார்கள்.
பாஸ் கட்சி அழைக்கப்பட்டது. ஆனால், டிஎபியுடனான பகைமை காரணமாக பாஸ் அம்மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்டது.
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் முகமட் ஷாபி அப்டலின் புதிய கட்சியான பார்டி வாரிசான் சாபா இம்மாநாட்டில் கலந்துகொள்வது எதுவும் அறிவிக்கப்படவில்லை.