பினாங்கு சட்டமன்றம் தொடங்கி ஒரு மணி நேரம்கூட ஆகவில்லை அவையில் குழப்படி செய்த ஒரு டிஏபி பிரதிநிதிக்கும் அம்னோ பிரதிநிதிக்கும் சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கேள்வி நேரத்தின்போது ஆர்.எஸ்.என். ராயரும் (டிஏபி-ஸ்ரீ டெலிமா), ரோஸ்லான் சைடினும் (பிஎன் -பினாங் துங்கால்) வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டமன்றத் தலைவர் சினமுற்றார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் ஒரு கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.
ராயர் எழுந்து நின்று ஒரு கேள்வி கேட்க முனைந்து ஆறு பேரைப் பலி கொண்ட ஜோகூர் சுல்தான் அமினா மருத்துவமனை தீ விபத்து பற்றிப் பேசத் தொடங்கினார். ரோஸ்லான் குறுக்கிட்டு அவரை அமரும்படி சைகை காட்ட ராயர் அவரை நோக்கி “kurang ajar” என்று கத்தினார்.
அதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. லாவ் குறுக்கிட்டு அவர்களின் கோமாளித்தனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.
“உங்கள் இருவரையுமே வெளியேறுமாறு கூறுவேன்”, என்று எச்சரித்தார்.
இருவரும் அடங்கினர். சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன.