அமனா பதவிக்காக அலையவில்லை: சிலாங்கூர் எம்பிக்கு அறிவுறுத்து

amanahசிலாங்கூரில்  பார்டி  அமனா    நெகரா     மாநில    அரசாங்கத்திடம்   பதவி  கேட்டு  அலையவில்லை     என்று    பேராளர்களில்   ஒருவர்   அதன்  பொதுப்  பேரவையில்   இன்று   கூறினார்.

ஆனால்,  சிலாங்கூர்  அரசிலுள்ள   பாஸ்    தலைவர்கள்   அமனா  கட்சியினருக்குப்  பல   இடையூறுகளைக்  கொடுக்கிறார்கள்  எனப்  பேராளர்   ஜம்சுரி   அர்டானி    கூறினார்.  இதற்குத்   தீர்வு  காணவில்லை   என்றால்     அடுத்த    தேர்தலில்   பக்கத்தான்  ஹராபான்   மாநிலத்தை   இழக்க  நேரலாம்   என்று   அவர்   எச்சரித்தார்.

“அமனா   பதவிக்காக   அலையவில்லை    என்பதை   மந்திரி  புசாருக்கு (அஸ்மின்  அலிக்கு)த்    தெரிவித்துக்  கொள்கிறோம்”,  என  ஜம்சுரி   இன்று ஷா  ஆலமில்   அமனாவின்   2016ஆம்  ஆண்டுப்  பொதுப்   பேரவையில்    கூறினார்.

“மாநில   அரசில்   நாங்களும்  ஒரு    பங்காளிக்கட்சியாக     ஏற்றுக்கொள்ளப்பட   வேண்டும்  என்பதுதான்    எங்கள்  விருப்பம்.  எங்களுக்கு    மாநில  அரசு    அழுத்தம்  கொடுப்பதையும்  நிர்வாகக்  கட்டுப்பாடுகளைப்  போட்டு   தொல்லை  கொடுப்பதையும்   நிறுத்த  வேண்டும்”,  என்றார்.    அரசு  நிர்வாகத்தில்   உள்ள   பாஸ்  கட்சியினர்   அமனா   உறுப்பினர்களுக்குப்  பிரச்னைகளைக்  கொடுப்பதாக     அவர்   சொன்னார்.

“பாஸ்  கட்சியைச்     சேர்ந்த    கம்பத்துத்  தலைவர்கள்,  சட்டமன்ற   உறுப்பினர்கள்,  ஊராட்சி  மன்ற   உறுப்பினர்கள்,  கவுன்சிலர்கள்,   ஆட்சிக்  குழுவினர்   நாங்கள்   பள்ளிவாசல்களில்    உரையாற்றுவதை  எதிர்க்கிறார்கள்,  தடுக்கிறார்கள்.

“சிலர்   நாங்கள்     அவர்களின்  மண்டபங்களைப்  பயன்படுத்துவதைக்கூட    அனுமதிப்பதில்லை”,  என   சிலாங்கூர்  அமனாவின்   தொடர்பு   இயக்குனரான   ஜம்சுரி   கூறினார்.