மலேசியா பற்றிப் பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன: சாலே சாடல்

salleh2017 “ஆருடங்களுக்கு   அப்பாற்பட்ட  ‘ஆபத்தான’   ஆண்டாக  விளங்கும்”  எனத்    தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே   சைட்  கெருவாக்  கூறுகிறார்.

மத்திய   கிழக்குச்    சண்டைச்  சச்சரவு,  ரஷ்யாவும்  அமெரிக்காவும்  முறுக்கிக்   கொண்டிருப்பது,  மலேசியாவைப்    பற்றிய பொய்யான  செய்திகள்   போன்றவை    அப்படி   நினைக்க   வைப்பதாக   அவர்   சொன்னார்.

மத்திய  கிழக்கில்    சண்டை நிறுத்தம்   நிலைத்து   நிற்காது   போனால்   அங்கு  நடக்கும்   சண்டைகள்     வரலாறு   காணாத   சோகமாக   மாறும்.

ரஷ்ய -அமெரிக்க  வாய்ச்   சண்டை   உலகை    மீண்டும்   பனிப்  போர்   காலத்துக்குக்  கொண்டு  சென்று    விடலாம்    என்றாரவர்.

“தவறான   கண்ணோட்டங்களும்   தவறான   தகவல்களும்    தப்பெண்ணங்களை   உருவாக்கி      சண்டைகளுக்கு   இட்டுச்   சென்று  விடுகின்றன.  ரஷ்ய- அமெரிக்க  முறுகுநிலை   இதற்கோர்   எடுக்காட்டு.  வதந்திகளும்    சந்தேகங்களும்தான்    அதற்குக்   காரணம்”.

அதேபோன்ற    தொல்லைதான்   மலேசியாவுக்கும்     என்றாரவர்.

“நாட்டைப்   பற்றிப்   பொய்யான    செய்திகள்   பரப்பப்படுகின்றன.  மலேசியா  திவாலாகப்   போகிறது   என்கிறார்கள்.  பின்னர்   தாபோங்   ஹாஜி   நொடித்துப்  போகும்   நிலையில்   இருப்பதாகச்  சொல்கிறார்கள்.  இப்படிப்பட்ட    எதிர்மறையான,   தப்பெண்ணத்தைத்   தோற்றுவிக்கும்    செய்திகள்    தொடர்கின்றன”,  என   சாலே   கூறினார்.

மலேசியர்கள்,   பொய்களையும்   பொய்யான    செய்திகளையும் ,   உறுதிப்படுத்திக்  கொள்ளாமலேயே    உண்மை   என்று   நம்பி   விடுகிறார்கள்   என்றாரவர்.