சீனப்பள்ளிகளுக்கான ரிம50 மில்லியன் நிதி: பிரச்சனையைத் தீர்த்து வைக்க நஜிப் வாக்குறுதி

 

najibtosolveசீனப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தை விரைவில் தீர்க்கப் போவதாக பிரதமர் நஜிப் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இதை மசீச தலைவர் லியோ தியோங் லை தெரிவித்ததாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. லியோவும் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கும் இவ்விவகாரம் குறித்து பிரதமரைச் சந்தித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக. அவ்விருவரும் கல்வி அமைச்சர் மாட்ஸிர் காலிட்டை அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னர் சந்தித்தனர்.

வெளிவந்துள்ள செய்திகளின்படி, சீனமொழி தொடக்கப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரிம50 மில்லியன் விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று மசீச தலைவர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியதாக லியோ கூறினார்.

இன்னும் முக்கியமானது, தேசிய வகை சீனமொழி இடைநிலைப்பள்ளிக்கு 2016 ஆண்டில் மட்டுமல்ல 2017 ஆண்டிலும் நிதி ஒதுக்கப்படாத விவகாரம் வேகமாக தீர்க்கப்பட வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாக லியோ தெரிவித்தார்.

மசீசவின் வேண்டுகோளுக்கு பிரதமர் நம்பிக்கை அளிக்கும் பதிலைக் கொடுத்ததாக லியோவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.