துணைப் பிரதமர் பதவி கேட்டது அவரது தனிப்பட்ட கருத்தாம், கூறுகிறார் மசீசவின் லோக்

 

MCAdpmlokeadmitsமசீசவுக்கு இரண்டாவது துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டதை மசீசவின் முன்னாள் துணைத் தலைமைச்செயளாலர் லோக் யுஎன் யோ உறுதிப்படுத்தினார்.

ஆனால், அவர் அவ்வாறு செய்தது அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் என்று லோக் இப்போது கூறுகிறார்.

ஒரு சீனர் இரண்டாவது துணைப் பிரதமராக நியமிக்கப்படுவது மசீசவுக்கும் கௌரவத்தைக் கொடுப்பதோடு கட்சி அதன் கடைமையைத் திறம்பட செய்வதற்கு வகைசெய்யும் என்று லோக் கூறியதாக இன்றைய சின் சியு டெய்லியின் மாலை பதிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சீனர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அது உதவும் என்று லோக் கூறினார்.

மசீச துணைப் பிரதமர் பதவி கேட்ட விவகாரத்தை வெளிப்படுத்தியவர் மகாதிர். அது குறித்து தாம் எதுவும் கூற விரும்பவில்லை ஏனென்றால் தாம் இப்போது மசீசவில் ஒரு தலைவராக இல்லை என்றார் லோக்.

மசீசவுக்கு துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்ற தமது வேண்டுகோள் தனிப்பட்டமுறையில் செய்யப்பட்டது என்றாலும் அது 2009 ஆண்டில் மசீசவின் அடிமட்ட உறுப்பினர்கள் எதை விரும்பினார்களோ அதைப் பிரதிபலித்தது என்று லோக் மேலும் கூறினார்.

இதனிடையே, லோக் கூறியிருப்பது மசீசவின் நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது என்று மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் கூறினார்.

மசீச துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுவதை தாம் மறுப்பதாகக் கூறிய பிரதமர் நஜிப், மசீசவும் அக்கூற்றை மறுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

மசீச மறுக்க முயல்வதாகத் தெரிகிறது.