இலஞ்சத்திற்கு எதிராக முன்னாள் எம்எசிசி தலைவர் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமருக்கு சவால்

 

PMchallengedஇலஞ்ச ஊழலுக்கு எதிராக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மலேசியர்களும் ஒன்றிணைந்து எழ வேண்டும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அபு காசிம் முகம்மட்டின் வலியுறுத்தலை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு பிரதமர் நஜிப்புக்கு சவால் விடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் “மலேசியாவைப் பாதுகாப்போம் வட்ட மேசை” மாநாட்டில் பங்கேற்க விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்வதின் மூலம் பிரதமர் நஜிப்பும் அவரது அமைச்சரவையும் அவ்வாறு செய்ய முடியும் என்று கெலாங் பாதா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங் கூறினார்.

நஜிப்பும் அவரது அமைச்சர் அவையும் மலேசியாவை அந்தப் பெரும் சுமையான உலக ஊழல் ஆட்சிமுறையிலிருந்து விடுவிப்பதற்கான நடைமுறையை முடுக்கிவிடப் போகிறார்களா அல்லது அந்தப் பெரும் சுமைக்கு அவர்கள்தான் பொறுப்பாளர்கள் … அதை அகற்றுவதற்கு அவர்கள் எதுவும் செய்யத் தயாராக இல்லை என்று வரலாற்றில் இடம்பெறப் போகிறார்களா என்று லிம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.

இலஞ்ச ஊழலுக்கு எதிராக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மலேசியர்களும் ஒன்றாக இணைந்து எழ வேண்டும் என்ற அபு காசிம் முகம்மட்டின் முன்ழொழிதலை தாம் ஏற்றுகொள்வதாக கூறிய லிம், ஊழலை அரசியலுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தினால், சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பது கடினமாகி விடும் என்று காசிம் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்களை விட, அபு காசிமுக்கு அவர் எதைப்பற்றி பேசினார் என்பது நன்கு தெரிந்திருக்க வேண்டும் என்றார் லிம்.

“மலேசியாவைப் பாதுகாப்போம்” வட்ட மேசை மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளும் சாத்தியமே இல்லை என்று கிட்டத்தட்ட அனைவரும் கூறுகின்றனர்.

அது நினைத்துப்பார்க்க முடியாததாகத் தெரிகிறது என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக லிம் கூறினார்.

ஏனென்றால் நஜிப்பு எதற்கும் தயாராக இருப்பதாக இன்று வரையில் தெரியவில்லை. 1எம்டிபி சம்பந்தப்பட்ட அனைத்துலக நாணயச் சலவை விவகாரத்தில் தேசிய மற்றும் அனைத்துலக நுண்ணாய்வுக்கு அவர் தயாராக இல்லை என்றார் லிம்.