எப்ஜிவி-இன் ரிம4.3 பில்லியன் எங்கே? ஷாரிர் கேள்வி

feldaபுதிதாக   நியமிக்கப்பட்ட   பெல்டா  தலைவர்   ஷாரிர்  அப்துல்   சமட்   பெல்டா   குளோபல்    வெண்ட்சர்ஸ்  முதல் பொதுப்பங்கு வெளியீடு(ஐபிஓ)  செய்தபோது  கிடைத்த   ரிம4.3 பில்லியன்  எப்படிச்  செலவிடப்பட்டது   என்பது  மர்மமாக   உள்ளது   என்றார்.

“பெல்டா   பங்குச்   சந்தையில்   பட்டியலிடப்பட்டபோது   அதற்கு  ரிம6   பில்லியன்  கிடைத்தது……..அதிலிருந்து  ரிமா1.7 பில்லியன்  பெல்டா  குடியேற்றக்காரர்களுக்காகச்   செலவிடப்பட்டது.

“குடியேற்றக்காரர்களின்  குடும்பங்கள்  ஒவ்வொன்றுக்கும்   ரிம15,000   கொடுக்கப்பட்டது.  மீதமிருந்தது  ரிம4.3 பில்லியன்.

“அந்த  ரிம4.3 பில்லியன்   எங்கே?”,  என்றவர்  வினவியதாக    சினார்   ஹரியான்  கூறியது.

விடைதெரியாத   இக்கேள்வி  பெல்டா   குடியேற்றக்காரர்களுக்கு   மிகுந்த   ஏமாற்றத்தைத்    தந்துள்ளது.

தலைமைக்  கணக்காய்வாளர்    அறிக்கை  பெல்டாவில்   ரிம200  மில்லியன்   முறையாக    செலவிடப்படவில்லை    என்று  கூறுவதை    ஷாரிர்    சுட்டிக்காட்டினார்.

“அதைத்  திரும்பப்   பெற  முயல்வோம்.   ஆனால்,  எல்லாம்   கிடைக்கும்     என்று   தோன்றவில்லை.

“ஒப்புதலின்றியும்   நெறிமுறைகளைப்  பின்பற்றாமலும்   பல   காரியங்கள்   நடந்துள்ளதாக    அறிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த  வகையில்  பெல்டாவின்   நிதிநிலையைச்    சரிப்படுத்துவதே   என்னுடைய   கடமை”,  என்றாரவர்.