பிரதமர் நஜிப்பையும் ஜொகாரியையும் வீழ்த்துவதற்கான புதிய “ஊழல் எதிர்ப்பு” கட்சி

 

New anti-corruption partyஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரே நோக்கத்தைக் கொண்ட ஒரு புதிய எதிர்க்கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது.

பிகேஆரின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸாம் முகமட் நோர் முன்னெடுத்துள்ள அக்கட்சிக்கு இரண்டே இலக்குகள் மட்டுமே உண்டு என்று அம்னோ முன்னாள் உறுப்பினர் கைருடின் அபு ஹசான் கூறினார்.

“பக்கத்தான் ஹரப்பானுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கைகள் இரண்டு மட்டுமே. எஸாம் பிரதமர் நஜிப்பை எதிர்த்து (அடுத்தப் பொதுத் தேர்தலில்) பெக்கானில் போட்டியிட விரும்புகிறார்.

“நான் இரண்டாவது நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனியை எதிர்த்துப் போட்டியிட விரும்புகிறேன். நாங்கள் நிதி அமைச்சர்களுடன் போராட விரும்புகிறோம்”, என்று கைருடின் மலேசியாகினியிடம் கூறினார்.

இது ஊழலை எதிர்க்கும் நோக்கத்துடன் ஒத்துப் போகிறது என்றாரவர்.

நஜிப் 1எம்டிபி நிதியிலிருந்து பல பில்லியன்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவர் அதை கடுமையாக மறுக்கிறார்.

இருப்பவர்களில் நஜிப்தான் மிகப் பெரிய ஊழல் பேர்வழி. ஜொகாரி அதற்கு ஒத்துழைப்பு அளித்து அந்த ஊழலை மூடிமறைத்து விட்டார் என்று கைருடின் கூறினார்.

நேற்று கைருடினும் எஸாமும் சந்தித்து புதிய கட்சி பற்றி விவாதித்ததாக கூறிய கைருடின், ஹரப்பானை எதிர்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், அக்கூட்டணியின் ஓர் அங்கமாக இருக்க அவர்கள் விரும்புவதாக கூறினார்.

அடுத்த வாரம் ஹரப்பான் தலைவர்களைச் சந்தித்து ஏன் புதிய கட்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருப்பதை அவர்களுக்கு விளக்கப் போவதாக கைருடின் மேலும் கூறினார்.