ஜைட்: பாஸுடன் ஒத்துழைப்பு பிஎன்னின் வீழ்ச்சிக்கு வழிகோலும்

ibraபாஸ்   கட்சியுடன்   ஒத்துழைப்பது    பிஎன்னின்    வீழ்ச்சிக்கு     வழிவகுக்கும்   என   முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்   இன்று   கூறினார்.

அந்த  இஸ்லாமியக்   கட்சியுடன்    நட்பு   பாராட்டுவதன்   மூலம்   பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கும்    அவரின்   கூட்டமும்    அவர்களின்   அழிவுக்கு    அவர்களே   வழி  தேடிக்  கொள்கிறார்கள்     என  ஜைட்   அவரது  வலைப்பதிவில்   கூறி  இருந்தார்.

“மலேசியாவில்   இப்போது   காணப்படுவதுபோன்ற   ஒரு  விழிப்புநிலையை   இதற்குமுன்   நான்  கண்டதில்லை”,   என்று  கூறிய   அவர்,   வரும்    பொதுத்   தேர்தலில்    பிஎன்   தோற்கடிக்கப்படும்     என்ற    நம்பிக்கை    கொள்வதாகக்  குறிப்பிட்டார்.

தேர்தல்   ஆணையம் (இசி)   ஆளும்   கூட்டணி    வெற்றி  பெறுவதற்கு    உதவியாக,    தேர்தல்   தொகுதிகளைத்    திருத்தி  அமைப்பது  உள்பட ,  பல     தந்திரங்களைக்  கையாண்ட   போதிலும்    அவை   எல்லாம்     “வீண்  முயற்சியாகும்”   என்றார்.

இப்போதைய   தலைவர்    அப்துல்   ஹாடி      ஆவாங்    தலைமையில்,  பாஸ்   “கிளந்தானில்  மூலை   முடுக்கெல்லாம்”   ஆதரவை  இழந்து   வருகிறது    என்று    முன்னாள்  அம்னோ   உறுப்பினரான  ஜைட்   குறிப்பிட்டார்.

“தோக்  குரு    டத்தோ    நிக்    அப்துல்   அசிஸ்    நிக்    மாட்    காலத்தில்    பாஸின்   அரசியல்   செராமாக்களுக்குச்  சாதாரணமாக   பத்தாயிரத்துக்கும்   குறையாமல்   கூட்டம்      சேரும்.  ஹாடியின்   பாஸ்    ஒரு  செராமாவைக்  கூட   ஏற்பாடு   செய்வதில்லை.   கூட்டம்  வராது     என்ற  பயம்”.

மார்ச்   15-இல்,   முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்    கோத்தா    பாருவில்   கலந்துகொண்ட   ஒரு   கூட்டத்துக்கு    10,000  பேர்   திரண்டு    வந்தனர்     என்றும்   மறுநாள்   தும்பாட்டில்   பாஸ்   துணைத்   தலைவர்    துவான்   இப்ராகிம்   துவான்   மான்  கூட்டத்தில்    1,200   பேர்தான்   கலந்து   கொண்டார்கள்    என்றும்   ஜைட்   கூறினார்.