செம்பருத்தி கோவிந்தராசுவின் மறைவு, தமிழருக்கு ஒரு பெரிய இழப்பாகும்

govindarajuசெம்பருத்தி கோவிந்தராசு என அழைக்கப்படும் கிள்ளான் வட்டாரத்தின் சமூக நலவாதியும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமிழர்களின் எழுச்சிக்கு வித்திட்டவருமான கோவிந்தராசு முனுசாமி இன்று மாலை காலமானார். வீட்டில் நினைவிழந்த நிலையில் இருந்த அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவரிடம் கொண்டுசென்ற போது அவர் இறந்து விட்டதாக அறிந்தோம் என்று குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்தனர்.

தனது 66 வயதை கடந்துவிட்ட கோவிந்தராசு, ஒரு தீவிரமான கர்ம வீரர், அஞ்சாநெஞ்சர், அயராது உழைப்பவர். செம்பருத்தி என்ற மாத இதழ் தொடக்கப்பட்ட காலம் முதல் அவர் தன்னை அதில் வெகுவாக ஈடுபடுத்திக்கொண்டார்.

பலருடன் இணைந்து பணியாற்றும் தன்மை கொண்ட இவர் தன்னலம் கருதாத பொதுநலமும் சமூக புரட்சியும் தமிழரின் மீழ்ச்சிக்கு வித்திடும் என்ற அயராத நோக்கோடு ஈடுபட்டவர்.

govindaraju2செம்பருத்தியின் நோக்கங்கள் அவரை ஈர்த்ததால் கிள்ளான் வட்டாரத்தில் செம்பருத்தி இயக்கம் என்ற ஒரு குழுவை உருவாக்கினார். அதன்வழி பல கலந்துரையாடல்களை நடத்தினார், செம்பருத்திற்காக தன்னால் இயன்ற நிதி உதவியையும் அளித்தார். தமிழர்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்ற வேட்கைக்கு அவர் தன்னை பெரும்மளவு ஈடுபடுத்திக்கொண்டார். அவை சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் போராட்ட உணர்வுடன் உடன் நின்றவர். அதோடு மட்டுமல்லாமல், உலகத்தமிழர் நிவாரணநிதிக்காக அயராமல் தொண்டு செய்தவர்.

இவரின் மறைவு தமிழர்களுக்கு ஒரு பெரும் இழப்பாகும்.

சமூகத்தொண்டு என்பதை வாழ்க்கை வழி வாழ்ந்து காட்டிய இவர் தன்னுடன் 17 குழந்தைகளை வளர்த்தார். அதில் அருவர் இவரின் குழந்தைகள்  மற்றவர்கள் வளர்ப்பு பிள்ளைகள். அன்னாருக்கு 25 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

கோவிந்தராசுவின் பிரிவால் துயருறும் அவரின் மனைவி இராமாயி மற்றும் அவரின் குழந்தைகள், உற்றார் உறவினர்களிக்கு செம்பருத்தி குடும்பத்தினர் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கின்றனர்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் No. 1 Jalan Hamzah Alang, Taman Sentosa, Kapar என்ற முகவரியில் 2.4.2017 மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெறும். அதன் பிறகு  சிம்பாங்லீமா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவலுக்கு கா. கலைமணி 0135207830 அல்லது 016 9176867 / 016 3080221 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளவும்.

செம்பருத்தி குடும்பத்தினர்.