ஒருதலைப்பட்சமான மத மாற்றம் பற்றிய சீர்திருத்தங்கள் மசோதா தள்ளிவைக்கப்பட்டது

 

unilateralconversionbillpostponedஒருதலைப்பட்சமான மத மாற்றத்தை தடுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் அடங்கிய மசோதா அடுத்த நாடாளுமன்ற தொடர்கூட்டத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மணி 5.05 க்கு முடிவுற்ற நாடாளுமன்றத்தின் மிக நீண்ட கூட்டத்தில் தள்ளிவைக்கப்பட்ட ஐந்து அரசாங்க மசோதாக்களில் திருமணம் மற்றும் மண விலக்கு சீர்திருத்தங்கள் மசோதாவும் ஒன்றாகும்.

நாடாளுமன்றத்தின் நடவடிக்கை பட்டியலில் எஞ்சிய இருப்பது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதி பரிபாலனம்) சம்பந்தப்பட்ட சட்டத் திருத்த மசோதா மட்டுமே.

ஒருதலைப்பட்ச மத மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக கடந்த எட்டு ஆண்டுகளாகஒ போராடி வரும் இந்திரா காந்தி, “நான் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். நான் எட்டு ஆண்டுகளாக காத்திருக்கிறேன்”, என்று கூறினார்.

“வாக்குறுதிகளுக்கு மேல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அது நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட போது நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

“(ஆனால் இப்போது), எப்போது நான் என் வாழ்க்கையைத் தொடர முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நான் காத்திருக்க வேண்டும்”, என்று மிகவும் கலக்கமடைந்திருந்த இந்திரா காந்தி நாடாளுமன்ற ஊடக அறையிலிருந்து இன்று கேட்டார்.

இந்த மசோதா இந்திரா காந்தி, எஸ். தீபா மற்றும் பலரின் தொடர் போராட்டத்தின் விளைவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், இப்போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர், இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி தமக்கு உறுதி அளித்திருந்ததாக நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“நான் ஸாகிட்டுடன் பேசினேன். தடங்கள் ஏதும் இருக்காது என்றும் யாரும் அதனை நிறுத்த முடியாது என்றும் என்னிடம் உறுதி அளித்தார்”, என்று குலசேகரன் கூறினார்.

ஸாகிட் இந்த உறுதிமொழியை கடந்த செவ்வாய்க்கிழமை அளித்தார், இது நாட்டின் நலன் சார்ந்தது என்றும் கூறினார்.

தாம் பிரதமருடன் ஓர் அவசரச் சந்திப்புக்கு முனைந்து வருவததாகக் கூறிய குலசேகரன், அதன் வழி மசோதாவை இன்று விவாதத்திற்கு கொண்டுவர இயலும் என்றார்.