ஹிசாமுடின்: சிண்டுமுடிந்து விடாதீர்

Hishamnoriftsபிரதமர் இலாகாவில் சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் அரசாங்க தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிண்டுமுடிந்து விடும் வேலையில் இறங்க வேண்டாம் என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏதாவது காரணங்களை உருவாக்கி எங்களுக்குள் சண்டையை தூண்டிவிடும் முயற்சியில் எந்தத் தரப்பினரும் ஈடுபடக்கூடாது, ஏனென்றால் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்வதாக துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடியே அறிக்கை வெளியிட்டிருக்கிரார் என்று ஹிசாமுடின் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த நியமனம் குறித்து துணைப் பிரதமர் ஸாகிட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தாம் இதனை ஆதரிப்பதாகவும் சில குறிப்பிட்ட அரசு நிர்வாக விவகாரங்களை செவ்வனே செய்வதற்கும் இதர நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஹிசாமுடினின் புதிய பொறுப்புகள் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நியமனம் மீதான பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலியின் ஊகங்கள் பற்றி கருத்துரைத்த ஹிசாமுடின், அது ரஃபிஸியின் சுத்தல் வேலையாகும். அது அவருடைய வேலை. ஆகவே, அதைப் பற்றி தாம் அலட்டிக்கொள்ளவில்லை என்று கூறிய அவர், “அவர் என்னை நியமிக்கவில்லை”, என்று மேலும் கூறினார்.

அவரது புதிய பணிகள் என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, “பிரதமருக்கு என்ன தேவைப்படுகிறதோ அது அவருடன் விவாதிக்கப்படும்”, என்றாரவர்.

“இந்த இலாகா நானும் ஸாகிட்டும் இணைந்து பிரதமருக்கு தொடர்ந்து உதவிகள் வழங்க அனுமதிக்கும் என்பதோடு நாங்கள் எங்களுடைய கடமைகளை விரிவுபடுத்தி பிரதமருக்கு ஒத்துழைப்பும் பிளவுபடாத ஆதரவும் அளிப்போம்”, என்று ஹிசாமுடின் மேலும் கூறினார்.