மகாதிர்: மலாய்க்காரர்கள் டிஎபியைவிட சீனாவை ஆதரிக்கும் பிரதமருக்கு பயப்பட வேண்டும்

 

Fearprochinapmமலாய்க்காரர்களும் அம்னோவும் டிஎபியைவிட சீனா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பிரதமர் நஜிப் பற்றி பயம் கொள்வதற்கு அதிகப்படியான காரணங்கள் இருக்கின்றன என்று மகாதிர் முகமட் கூறுகிறார்.

மலாக்கா மற்றும் குவாந்தான் ஆகியவற்றின் புதிய துறைமுக வசதிகளை, நஜிப் நிருவாகத்தின் அனுமதியுடன், சீனாவின் இராணுவம் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உண்டு என்று மகாதிர் கூறுகிறார்.

அடுத்த பொதுத் தேர்தலில் நஜிப்புக்கும் அம்னோவுக்கும் கிடைக்கும் வெற்றி மலேசியாவை சீனாவுடன் இணைக்கும். அத்துடன் மலேசியா ஒரு நடுநிலை வெளிவிவகாரக் கொள்கையை கொண்டிராது என்று மகாதிர் அவரது வலைத்தளப் பதிவில் கூறுகிறார்.

அந்த இரு துறைமுகங்களையும் அந்த வல்லரசின் கடற்படை பயன்படுத்தும் என்று ஒரு சீன எழுத்தாளர் எழுதியிருப்பதாக மகாதிர் குறிப்பிடுகிறார். அந்த எழுத்தாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.

மலாக்கா நுழைவாயில் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த ஆழ்கடல் துறைமுகத்தை சீனாவும் மலேசியாவும் கூட்டாக மேம்படுத்தி வருகின்றன. 2019 இல் அது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவாந்தானில், குவாந்தான் இண்டஸ்ரியல் பார்க் மற்றும் குவாந்தான் துறைமுக விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றில் சீனா பெரும் முதலீடு செய்துள்ளது.

கிழக்குக் கரை ரயில் இணப்பு (இஆர்சிஎல்) அதன் இறுதிக்கட்டத்தில் தென் சீனக் கடலையும் மலாக்கா நீரிணையையும் இணைக்கும் தரைப்பாலமாக செயல்படும். இது சிங்கப்பூரைத் தவிர்க்கும் மாற்றுவழியாக அமையும்.

இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தும் நஜிப் நிறுவாகத்தால் தொடங்கப்பட்டவை.

டிஎபி பிரதமர் பதவியைக் கேட்கவில்லை

அடிக்கடி நஜிப்பும் அம்னோவும் டிஎபி பிரதமர் அல்லது துணைப் பிரதமர் பதவியைக் கேட்பதாக கூறுவதில் உண்மை இல்லை என்று மகாதிர் எழுதியுள்ளார்.

டிஎபி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அது வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாது என்று கூறும் மகாதிர், ஹரப்பான் கூட்டணி மீது டிஎபி ஆதிக்கம் செலுத்த முடியாது, பினாங்கைத் தவிர dr mஎன்கிறார்.

சீனர் அல்லாதவர்களைத் தலைவர்களாகவும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் டிஎபியை “சீனக் கட்சி” என்று கூறும் அம்னோவும் அதன் பங்காளிக் கட்சிகளும் 100 விழுக்காடு சீனர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் எம்சிஎவைப் பற்றி எதுவும் கூறுவதில்லை. ஏன்?, என்று மகாதிர் கேட்டுள்ளார்.

மாறாக, டிஎபியில் அதிகமான மலேசிய வாசனை இருப்பதாக கூறும் மகாதிர், அதில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மற்றும் சாபா மற்றும் சரவாக் பூர்வீகக் குடிமக்களும் அங்கம் பெற்றுள்ளனர். மேலும் அதன் முக்கிய கூட்டங்களில் டிஎபி மலாய் மொழியைப் பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாதிர் மாறியிருக்கிறார். கடந்த காலத்தில், அவர் டிஎபியையும் லிம் கிட் சியாங்யையும் இனவாதிகள் என்று சாடியுள்ளார்.