நஜிப்பை வெளியேற்றுங்கள், பெக்கான் மக்களுக்கு மகாதிர் வேண்டுகோள்

 

mssaysshowthedoortonajib“நாட்டை காப்பாற்ற” அடுத்தப் பொதுத் தேர்தலில் நஜிப்பை வெளியேற்றுங்கள் என்று பெக்கான் நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர்களை முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கேட்டுக்கொண்டார்.

பெர்சத்து முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு வீடியோ செய்தில், பிரதமரான பின்னர் நஜிப் மாறி விட்டார் என்று கூறுகிறார் மகாதிர்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் பெக்கான் மிக முக்கியமான தொகுதியாக தாம் கருதுவதாக கூறிய மகாதிர், அத்தொகுதியின் பிரதிநிதி எதிர்பாராத வகையில் ஒரு முக்கியமானவராகி வெறுக்கத்தக்க செயல்களைச் செய்துள்ளார். அச்செயல்கள் நாட்டிற்கு தீங்கானவைகளாக இருக்கின்றன என்றார்.

“அவர் பணத்தை திருடியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறார்… இப்போது அவர் நாட்டிற்கு தீங்கிழைக்கும் கொள்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்”, என்று பெர்சத்துவின் தலைவரான மகாதிர் கூறுகிறார்.

நஜிப்பின் தந்தை அப்துல் ரசாக் நான் பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்தார். அதனால்தான் நான் நஜிப் பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்தேன். ஆனால் அவரது நடத்தையும் செய்கைகளும் அவருடைய தந்தையைவிட மிக வேறுபட்டதாகும்.

பல தவறான செயல்களில், 1எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் ஆகிய நிறுவனங்கள் ரிம2.6 பில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இவை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரின் “தவறான செயல்களுக்கு” எடுத்துக்காட்டுகள்.

தாம் கூறிய ஆலோசனைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று என்பதோடு அவர் செய்ததையே செய்து கொண்டிருக்கிறார் என்றார் மகாதிர்.

பெக்கான் வாக்காளர்கள் நஜிப்பின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும் சக்தியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுறுத்திய மகாதிர், எப்படி அவர் 1999 ஆண்டில் மிகக் குறுகிய 241 வாக்குகள் பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

“நஜிப்பை தோற்கடிப்பதன் மூலம் நாட்டைக் காப்பாற்றும் வாய்ப்பை பெக்கான் வாக்காளர்கள் பெற்றிருக்கின்றனர்…எந்தக் கட்சி நஜிப்புக்கு எதிராக நிற்கிறதோ அதை ஆதரியுங்கள். நாம் நஜிப்பை வீழ்த்துவதற்காக போராடுவோம்”, என்றார் மகாதிர்.