அம்னோ கூட்டம் பெர்சே 5, சட்டம் 355 பேரணிகளுக்குத் திரண்டதைவிட பெரிது, ஆனால்………

bukit கடந்த    12மாதங்களில்   நடந்தேறிய    மிகப்   பெரிய     பேரணி     என்றால்     அது   நேற்றைய   அம்னோ   பேரணிதான்.    அம்னோவின்    வலிமையைக்   காண்பிக்கும்   முகமாக    80ஆயிரம்    ஆதரவாளர்கள்   புக்கிட்   ஜலில்    தேசிய    விளையாட்டரங்கில்     கூடியிருந்தனர்.

71ஆம்    ஆண்டு  நிறைவைக்   கொண்டாடுவதற்காகக்   கூடிய    கூட்டம்    அரங்கை  முழுமையாக   நிறைக்கவில்லைதான் -மூன்றில்   ஒரு   பகுதி   இருக்கைகள்  காலியாகத்தான்   கிடந்தன-   என்றாலும்   கடந்த    நவம்பரில்    கூடிய   பெர்சே   5  பேரணியில்   கலந்து  கொண்டவர்களைவிட   இதில்   கலந்து   கொண்டவர்    எண்ணிக்கை   இரு  மடங்கு   அதிகம்.  55ஆயிரம்   பேர்  கலந்து  கொண்ட    பாஸின்    355   சட்டப்   பேரணியைக்   காட்டிலும்   இப்பேரணி  பெரிதுதான்.

அவ்வளவு   பெரிய   கூட்டத்தைக்  கண்டு   அம்னோ    தலைவர்   நஜிப்    அப்துல்    ரசாக்கும்  புளகாங்கிதம்    அடைந்தார்.  திடீர்    தேர்தல்   குறித்தும்    அவர்  கிண்டலடித்தார்.

“நாளையே   நாடாளுமன்றம்   கலைக்கப்பட்டால்   (தேர்தலுக்கு)  நாம்  தயாராக    இருக்கிறோமோ?”,  என்றவர்   வினவ,    கூட்டத்தினர்   “ஆம்”   என்று   ஆர்வத்துடன்      முழக்கமிட்டனர்.

அம்னோவின்  உறுப்பினர்    எண்ணிக்கை  மூன்று   மில்லியன்.   அதில்   பேரணிக்கு    வந்திருப்பர்    ஒரு  சிறு   பகுதியினர்தான்   என்று  நஜிப்    பெருமையாகக்   குறிப்பிட்டார்.

இப்படி   ஒரு  புறம்  பெருமையடித்துக்   கொண்டும்   அரசியல்   வலிமையைக்  காண்பிக்க   சில   சாகசங்களும்  அரங்கேற்றப்படும்   வேளையில்   மறுபுறம்   அம்னோவுக்கு    மக்களின்   ஆதரவு   மிகவும்    குறைந்து   போயிருப்பதாகக்   கூறப்படுகிறது.

பிகேஆர்   தொடர்புள்ள  இன்வோக்,   ஜனவரியில்   வெளியிட்ட    ஆய்வில்     அம்னோவுக்கு   மலாய்க்காரர்களின்   ஆதரவு    40  விழுக்காடுதான்     என்று   குறிப்பிட்டது.

விலைவாசி   உயர்வு    அரசுப்   பணியாளர்களை    ஆளும்  கட்சிக்கு     எதிராக    திருப்பி  விடலாம்    என   அம்னோ   கட்சியினரே   கவலை  கொண்டிருப்பதாக    ராய்ட்டரும்     செய்தி   வெளியிட்டிருந்தது.

இதனிடையே,  அம்னோவிலிருந்து   பிரிந்து   சென்றோரால்     உருவாக்கப்பட்ட   பார்டி    பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  -முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டின்   வழிகாட்டலில்-  மலாய்க்காரர்    ஆதரவை   நிறைய   பெற்று   அம்னோவுக்கு  ஒரு  மிரட்டலாக   விளங்குகிறது.

அந்த  வகையில்    அடுத்த   தேர்தலில்   அம்னோ   கடும்  போட்டியை     எதிர்நோக்கலாம்.

இப்படிப்பட்ட   நிலவரங்களால்   கவலை  கொண்டுள்ள   அம்னோ    அதை  மூடி   மறைக்கத்தான்    71ஆம்   ஆண்டு   நிறைவை  மிகப்   பெரிய    அளவில்  கொண்டாட  ஏற்பாடுகளைச்   செய்தது   போலும்.  அம்னோ   70ஆம்   ஆண்டு  நிறைவு  விழாகூட    புத்ரா   உலக   வாணிக   மையத்தில்    ஆரவாரமின்றி அடக்கமாகத்தான்   நடந்தது.

கூட்டத்தைப்  பெரிதாகக்   காண்பிக்க    நூற்றுக்கணக்கான     பல்கலைக்கழக   மாணவர்கள்     கட்டாயப்படுத்தியோ   ஏதோ  சொல்லி   ஏமாற்றியோ   அழைத்து  வரப்பட்டிருந்தார்கள்.

அவர்களுக்குப்   பரிசுப்  பொருள்கள்   கொடுக்கப்பட்டன.  இலவச  போக்குவரத்துக்கும்   ஏற்பாடு    செய்யப்பட்டிருந்தது.  அவர்களைச்  சுமந்த   வந்த   பேருந்துகள்    கெஸாஸ்   நெடுஞ்சாலை     நெடுகிலும்   வரிசையாக   நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தன.

உண்மை  நிலவரத்தை  மூடிமறைக்க    கூட்டத்தை  வைத்து    அம்னோ  கூத்தாடுகிறது    என்று  கூறுவதை  வைத்து   அம்னோவின்  கதி   அதோகதிதான்   என்ற   முடிவுக்கு  வந்து  விடக்கூடாது.

நஜிப்   தேர்தலில்   வெற்றிபெற   வாய்ப்பு   இருக்கவே    செய்கிறது.    எதிரணி  பிளவுபட்டுக்  கிடப்பது   அவருக்கு  வெற்றியாகும்.

பாஸ்,    பக்காத்தான்,   பாரிசான்  நேசனல்   என   மும்முனைப்   போட்டி     எதிரணி   வாக்குகளைச்   சிதறடிக்கும்.  அது  போதும்    அம்னோ/  பாரிசான்   வெற்றிபெற.