அகதிகள் தாகத்துக்கு கழிவறை நீரைக் குடிக்கிறார்களாம்: கார்டியன் செய்தி

campமலேசிய  குடிநுழைவுத்துறை  மையங்களில்    தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்   அகதிகளும்    அரசியல்   புகலிடம்    நாடி     வந்தோரும்     தாகம்    தீர்க்கக்  கழிவறை    நீரை   அருந்த    வேண்டியிருப்பதாக   த   கார்டியன்   செய்தி   வெளியிட்டுள்ளது.

“எங்களுக்கு    உணவுடன்   ஒரு   சிறு   கோப்பையில்    தண்ணீரும்   கொடுக்கிறார்கள்,   அது  இல்லை   என்னும்போது   கழிவரை   நீரைத்தான்   குடிக்கிறோம்”,  என   18-வயது   ரோஹிஞ்யா   அகதி   மவ்யுரா பேகம்    அந்த   யுகே    நாளேட்டிடம்   தெரிவித்தார்.

ஓராண்டாக    கெடா,  பெலாந்திக்   மையத்தில்     தடுத்து   வைக்கப்பட்டுள்ள   மவ்யுரா,   அங்குள்ள   காவலர்கள்   அகதிகளை    அடிப்பதும்   வழக்கம்     என்றார்.

“யாராவது   ஒருவர்    சாகும்   நிலையில்    இருந்தால்   மட்டுமே   காவலர்கள்    வருவார்கள்.  நாங்கள்   ஏதாவது   முறையிட்டாலோ,    மருத்துவமனைக்குப்     போக    வேண்டும்    என்று    கூறினாலோ    அடிப்பார்கள்”,  என்றவர்   சொன்னார்.

சில   நேரங்களில்    அடிஉதை   அளவுமீறிச்    சென்று   விடுவதும்   உண்டு   என மியான்மார்   கச்சின்   மாநில    அகதி   ஒருவர்    கூறினார்.

அவர்  தன்  பெயரைத்   தெரிவிக்க   விரும்பவில்லை.  ஒரு   தடவை   அவர்     கண்ணெதிரே    இலங்கை   அகதி    ஒருவர்  அடித்தே  கொல்லப்பட்டாராம்.

“ஆனால்,  அவர்   நோயால்   இறந்தார்    என்று    எங்களிடம்    சொன்னார்கள்”,  என்றார்.

2015-இலிருந்து    குடிநுழைவுத்  துறை   தடுப்பு   முகாம்களில்   24 பேர்   இறந்ததாக   ஐநா    அகதிகளுக்கான   உயர்    ஆணையர்       த  கார்டியனிடம்    தெரிவித்தார்.   பெரும்பாலோர்    நோய்கண்டு   இறந்தார்கள்   என்றாரவர்.

இறந்தவர்களில்    அதிகமானோர்   மியான்மார்   நாட்டவர்(73),   அவர்களை   அடுத்து   இந்தோனேசியர்  (23),   வங்காளதேசிகள் (14).

அகதிகள்  இறப்புக்கு    காசநோய்,  எச்ஐவி   போன்ற  நோய்களே    காரணம்    என்று    உள்துறை    அமைச்சு   கூறிற்று.

கார்டியன்    செய்தி    குறித்து   உள்துறை   அமைச்சின்   கருத்தை    அறிய    துணை   அமைச்சர்   நூர்   ஜஸ்லான்  முகம்மட்டைத்  தொடர்புகொள்ள    மலேசியாகினி   முயன்று     வருகிறது.