ராடார் கருவி ஒன்று ஜொகூர்பாரு துறைமுகத்தில் காணாமல் போனது

Slide2புத்ராஜெயா – நெதர்லாந்துக்குச் சொந்தமான, மில்லியன் ரிங்கிட் பெருமானமுள்ள ராடார் கருவி ஒன்று, ஜொகூர் பாரு, தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்தில் காணாமல் போனது.

‘தி ஸ்டார்’ நாளிதழின் தகவல்படி, ஜொகூர் வழியாக நெதர்லாந்து செல்ல, ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட அக்கருவி, அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் (மித்தி) போக்குவரத்து ஆவணங்களுக்காக, சுங்கத்துறையின் பார்வையில் அத்துறைமுகத்தில் காத்திருந்ததாக தெரியவருகிறது.

கடந்த மாதம் , இராணுவ உபகரணங்களுக்கான ‘மித்தி’யின் வியூக வணிகச் சட்டம் 2010-ன் கீழ், முறையான அனுமதியின்றி, அந்த உயர்த் தொழில்நுட்ப இராணுவ உபகரணம் ஒரு கொள்கலனில் தஞ்சோங் பெலெபாஸ் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த சுங்கத் துறையின் தணிக்கை சோதனையின் போது, முறையான ஆவணம் ஏதும் இல்லாத அப்பொருள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து;  காவல்துறையில் புகார் செய்யப்பட்டதை நூசாஜெயா மாவட்டப் போலிஸ் தலைவர் நோர் அசிம் முகமட் உறுதிபடுத்தினார்.

மேலும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, மற்றொரு கப்பலில் ஏற்றப்பட்டு, பாதுகாப்பாக நெதர்லாந்திற்கு Slide1 அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கு இல்லை என சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாக ‘தி ஸ்டார்’ குறிப்பிட்டது.

துறைமுகத்தின் நுழைவாயில்களில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், அங்கிருந்து பொருள்களை வெளியேற்றுவது கடினம் என்று அதிகாரிகள் கூறியதாகவும் அந்நாளேடு மேலும் தெரிவித்தது.

சுங்கத்துறை மற்றும் மித்தி காணாமல் போன ராடார் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் வேளை, சுங்கத் துறையின் உதவி இயக்குனர் ஜெனரல் பேடி அப்துல் ஹாலிம் உள் விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.