கல்வி அமைச்சர் : சிலாங்கூர் முதலில் யூனிசெல்லில் இலவசக் கல்வியைச் செயல்படுத்தட்டும்

Slide1இலவசக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரமாக இருக்கும் சிலாங்கூர் மாநில அரசு, முதலில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யூனிசெல்) அதனை அமல்படுத்தட்டும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ மாஹ்ட்ஷீர் காலிட் கேட்டுக்கொண்டார்.

மக்கள் நீதிக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், யூனிசெல்லில் இதனை நடைமுறைபடுத்தி, இத்திட்டத்திற்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

“இலவசக் கல்வியைக் கொடுக்க விரும்பினால், முதலில் யூனிசெல்லில் அதைச் செய்யட்டும்,” என ஷா ஆலாம் அம்னோ மகளிர், இளைஞர் , புத்ரி பிரதிநிதிகள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தபின், செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.

பாலர் பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை வழங்கப்போவதாக, 14-வது பொதுத் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கும் சிலாங்கூர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நிக் நஷ்மி நிக் அஹ்மாடின் கூற்றுக்குக் கருத்து தெரிவிக்கயில் கல்வி அமைச்சர் அவ்வாறு பேசினார் என, பெர்னாமா செய்திகள் கூறுகின்றன.

சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாம் கல்லூரி பல்கலைக்கழகம் (குய்ஸ்) மற்றும் சிலாங்கூர் மாநில அனைத்துலகத் தொழிற்துறைக் கல்வி கல்லூரி (இன்ஸ்பான்ஸ்) ஆகியவை சிலாங்கூர் மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற கல்வி நிறுவனங்களாகும்.