இந்தியாவை திசை திருப்பிய காமராசர்!

kamarajarஞாயிறு நக்கீரன்-15.7.2017. இன்று ஜூலை 15-ஆம் நாள் கர்மவீரர் காமராசருக்கு பிறந்த நாள். இந்தியாவின் போக்கை திசை திருப்பியவர், அரசியல் சிற்பி காமராசர். பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காத இவரை, 1960-ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவும் அமெரிக்காவும் போட்டி போட்டு தங்கள் நாட்டிற்கு விருந்தாளியாக அழைத்தன. அந்த அளவிற்கு அரசியல் மேதையாகத் திகழ்ந்த காமராசர், ஒரு மாநிலத்தின் முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தேசியக் கட்சியின் தலைவர் எவ்வாறு திகழ வேண்டும் என்பதற்கும் தகுந்த சான்றாக வாழ்ந்து காட்டியவர்.

பஞ்சசீலக் கொள்கையில் கையொப்பமிடுவதற்காக டாஷ்கண்ட் சென்ற பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, மர்மமான முறையில் இறந்ததால், புது டில்லி ஆட்சி நிர்வாகத்தில் திடீரென வெற்றிடம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்(1966) மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதை முறியடித்து இந்தியாவை ஒரு பெண் ஆள வேண்டும் என்று முடிவெடுத்து, நேரு குடும்பத்தின்பால் வைத்த பற்றும் காமராசரின் மனதைத் தொற்றிக் கொள்ள, இந்திரா காந்தியை இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆக்கினார் காமராசர்.

அந்த முடிவுதான், தமிழினத்தை, அதன் தலைநிலத்திலேயே இன்று மெல்ல மெல்ல அழித்து கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த நேரத்தில், 1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி முதல்வரானார் அறிஞர் அண்ணா. அதைக் கண்டு பொறுக்கமாட்டாத இந்திரா, அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் என்பவரைத் தூண்டிவிட்டு, காவிரி ஆற்றுக்கு தண்ணீரைக் கொண்டு வரும் துணை நதிகளான கபினி, ஹேமாவதி, சொர்ணமுகி, சாரங்கி உள்ளிட்ட ஐந்து நதிகளிலும் அணைகளைக் கட்ட வைத்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தினார்.

அத்துடன், 1974-இல் காவிரி நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, இதன் தொடர்பில் வழக்கு தொடர்ந்த அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை வஞ்சகமாக ஏமாற்றி திரும்பப் பெற வைத்தார். கர்நாடக மாநில அரசு இன்று கொழுத்துத் திரிவதற்கும் தமிழகத்தை ஒரு பொருட்டாக மதிக்காததற்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.

சென்னை மாகாணத்திற்காக மேட்டூர் அணையையும் மைசூர் மாகாணத்திற்கென கிருஷ்ண ராஜசாகர் அணையையும் கட்டிய ஆங்கிலேய நிருவாகத்தினர், அவற்றை அந்தந்த மாநில(மாகாண) மக்கள் முறையாக பயன்படுத்துவதுடன் ஐம்பது ஆண்டுகள் கழித்து அப்போதைய பாசனப் பரப்பு, இயற்கைச் சூழல், மழை வாய்ப்பு, மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் காவிரித் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று 1924-இல் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதுதான் காவிரி  நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தனைக்கும் 1969-இல் காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ் என்றும் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு, புதுடில்லியில் அரசியல் நெருக்கடியை இந்திரா எதிர்கொண்டபோது, திமுக-வின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் நாஞ்சில் மனோகரன் தலைமையில் இந்திராவிற்கு வழங்கி ஆதரவு  தெரிவித்தார் கருணாநிதி.

தமிழகத்தை வறண்ட பகுதியாக்க இரகசித் திட்டம் தீட்டியது போதாதென்று, தமிழக கடற்கரைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுக்கும் விதமாக, தமிழக மக்களை ஒரு பொருட்டாகவேக் கருதாமல் தமிழ் மண்ணுக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தார் இந்திரா காந்தி.

இப்படி இந்திரா காந்தி தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கு செய்த இரண்டகத்தால், தமிழ் மக்களின் நிலை தமிழ்நாட்டில் பெரும் கேள்விக்குறியாகி வருவது குறித்து இன்றளவும் எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழ் மக்களின் நலனிலும் மேம்பாட்டிலும் முகுந்த அக்கறைக் கொண்டிருந்த கர்ம வீரர் காமராசர், இந்திரா காந்தி எதிர்காலத்தில் இப்படி யெல்லாம் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.

மற்றபடி, காலமெல்லாம் ஏழைப் பங்காளனாகவே வாழ்ந்த காமராசர்,  அதே இந்திராவால் பழிதீர்க்கப்பட்டதுதான் கொடுமை. எது எவ்வாறாயினும், தமிழர்கள் மனதில் காமராசருக்கு என்றென்றும் இடம் உண்டு. 1975-ஆம் ஆண்டில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் நாளில் மறைந்த காமராசர், 1903-ஆம் ஆண்டு இதே நாளில் விருதுநகரில் பிறந்தார்.

இவரை காமராஜர் என்று எல்லோரும் அழைக்க, தந்தை பெரியார்தான் காமராசர் என்று அழைத்ததுடன். ‘பச்சைத் தமிழர்’ என்ற பட்டத்தையும் சூட்டினார்.