பெர்காசா : மற்ற இன முஸ்லிம்களும் பூமிபுத்ரா அந்தஸ்துக்குத் தகுதி உடையவர்களா?

இந்திய முஸ்லிம்களுக்குப் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கும் பரிசீலனையில் அரசாங்கம் வெளிப்படையாகperkasa - ali இருக்க வேண்டும் என, மலாய்க்காரர்கள் உரிமை குழு (பெர்காசா) புத்ரா ஜெயாவைக் கேட்டுக்கொண்டது.

தற்போது , பூமிபுத்ரா அந்தஸ்து (மண்ணின் மைந்தர்கள்) மத அடிப்படையில் இல்லாமல், ஒரு நிலத்தின் பூர்வீக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே, சபா மற்றும் சரவாக் பூர்வீகர்களும் பூமிபுத்ராவாக அங்கீகரிக்கப்பட்டனர் எனப் பெர்காசாவின் தோற்றுனரும் தலைவருமாகிய இப்ராஹிம் அலி சுட்டிக் காட்டினார்.

எனவே, பூமிபுத்ரா அந்தஸ்தை மத்திய அரசாங்கம் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறது என்பதை அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

“இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இந்தச் சலுகை, மத அடிப்படையில் வழங்கப்படுகிறதா?  இல்லை, வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? பிற இன முஸ்லிம்களுக்கும் பூமிபுத்ரா அந்தஸ்து பெறும் உரிமை உண்டா?”, என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் இப்ராஹிம் அலி கேட்டிருந்தார்.

மலேசியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பிறந்தவர்கள், மலேசிய குடியுரிமை பெற்றபின், பூமிபுத்ரா அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களா? எனவும் அவர் கேட்டிருந்தார்.

“பல தாக்கங்களையும் பிரச்சனைகளையும் உள்ளடக்கிய ஓர் உணர்ச்சிபூர்வமான விசயம் இது. அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, குறிப்பாக, ஏற்கனவே உள்ள பூமிபுத்ரா இனத்தினரால் ஜீரணிக்கக்கூடிய விசயமா இது, என்பதை எல்லாம் பல கோணங்களிலிருந்து பரிசீலிக்க வேண்டும்”, என அவர் சொன்னார்.

najibஒரு முடிவை எடுப்பதில் அவசரம் கூடாது என்று அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு, வரலாறு மற்றும் எல்லோருடைய ஆதரவையும் கொண்டிருந்தால், அரசாங்கத்தின் எந்தவொரு முடிவையும் பெர்காசா ஆதரிக்கும் என அவர் மேலும் கூறினார்.

கடந்த புதன்கிழமை, இந்திய முஸ்லிம்களின் பூமிபுத்ரா கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஷாக் கூறியிருந்தார்.

மத்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பூமிபுத்ரா அந்தஸ்து தொடர்பாக எதுவும் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்றாலும்; இதுநாள் வரை ‘பூமிபுத்ரா’ அந்தஸ்து கொண்டவர்கள், கல்வியில் சிறப்பு ஒதுக்கீடு மற்றும் வீட்டுமனை வாங்குவதில் 10% சிறப்பு கழிவு உட்பட, பல சமூகப் பொருளாதாரச் சலுகைகளைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.