சரவாக்கில் நுழைய, ‘லிசன்’ கே.எஸ்.பவானிக்குத் தடை!

பவானி-சரவாக்இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைச் செயலாளர் பவானி கன்னியப்பன் சரவாக் விமான நிலையத்தில், குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சரவாக் மாநிலத்தினுள் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்ததாக கே.எஸ்.பவானி கூறினார்.

பேராக் , கம்பாரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தனது போக்குவரத்து நிலை குறித்து ஈப்போ குடிநுழைவுத்துறையில் உறுதிபடுத்தியதாக பவானி கூறினார். ஈப்போ குடிநுழைவுத்துறை ‘தடையேதும் இல்லை’ என்று தெரிவித்த பின்னரே, அவர் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆக, திடீரென சரவாக் குடிநுழைவுத்துறை ஏன் அவரைத் தடுத்து நிறுத்தியது எனக் கேட்டதற்கு, “சரவாக் மாநில அரசின் கட்டளை அது, கடந்த 2016 முதல் பவானி சரவாக் மாநிலத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்ததாக வழக்கறிஞருமான பவானி தெரிவித்தார்.

சரவாக் விமான நிலையக் குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.எஸ்.பவானி, 2 மணி விமானத்தில் கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.

போலிஸ் புகார் செய்ய வேண்டுமென்ற அவரது கோரிக்கையையும் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். மேலும், கோலாலம்பூருக்கான விமானப் பயணச் செலவையும் அவரையேச் செலுத்த சொல்லி அதிகாரிகள் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றிரவு தன் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள, கே.எஸ்.பவானி  சரவாக் சென்றுள்ளார். தற்போது விமான நிலைய குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் இருக்கும் அவரை 016 900 8202 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பி.எஸ்.எம். கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர், சிவராஜன் ஆறுமுகம் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.