ஜசெக-விடம் ஏமாறாதீர்கள், சீன வாக்காளர்களுக்குத் துணைப் பிரதமர் அறிவுரை

Slide1ஜனநாயக செயற்கட்சியினால் (ஜசெக) தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும்படி, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி சீன வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

கடந்த 12 மற்றும் 13-ம் பொதுத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழ்நிலையில், இன்னும் அக்கட்சியைத் தொடர்ந்து நம்பியிருக்க வேண்டாமென அம்னோ துணைத் தலைவருமான அவர் சீன சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.

“கடந்த 2 பொதுத் தேர்தல்களிலும் ஜசெக அவ்வாறே நடந்துகொண்டது. பினாங்கு மாநிலத்தில் மக்கள் அவர்களுக்கு அளித்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்தி கொள்ளவில்லை, பாரிசானைவிட சிறப்பாக அவர்களால் பணியாற்ற முடியவில்லை. ஆக, ஜசெக உங்களை ஏமாற்றியது போதும்; 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் பாரிசானிடமே வந்துவிடுங்களென சீன சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என இன்று, பண்டார் ஹீலிர், கோத்தா மலாக்கா அம்னோ பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து பேசுகையில் அவர் கூறினார்.

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சீன வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, பாரிசான் உறுப்புக் கட்சிகள், குறிப்பாக, மசீச மற்றும் கெராக்கான் கடினமாக உழைக்க வேண்டும்; எதிர்க்கட்சியின் அனைத்து சவால்களையும் எதிர்ப்புகளையும் உடைத்தெறிய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

“2013-ம் ஆண்டு, எதிர்கட்சியினர் கைவசமான இடங்களை, கடினமான முயற்சியின் வழி நம்மால் திரும்பப் பெறமுடியுமென நான் நம்புகிறேன். கடந்த பொதுத் தேர்தலில், வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் எதிர்க்கட்சியினர் நமக்கு பெரிய சவாலாக இருந்தனர். ஆனால், இதுபோன்ற சவால்களால் பாரிசான் உறுப்பினர்கள் துவண்டுவிடக் கூடாது, தொடர்ந்து போராட வேண்டும்,” என அம்னோ பேராளர்களை அவர் கேட்டுகொண்டார்.

வெற்றி கிடைக்கவில்லை என்று சரணடைந்துவிடக் கூடாது, மக்களின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென அவர் அறிவுரை கூறினார். பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலை திட்டங்களுக்கே அம்னோ உறுப்பினர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் ; 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதே நமது முகான்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அங்கு கூடியிருந்த பேராளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். பொதுத் தேர்தலை எதிர்கொள்ள உங்களை வேட்பாளராகத் தயார் செய்வதைவிட, வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டுவது மிக முக்கியம்,” எனப் பேராளர்களிடம்  அவர் வலியுறுத்தினார்.

துணைப் பிரதமரோடு, மலாக்கா முதல்வர் டத்தோ ஶ்ரீ இட்ரிஸ் ஹரோன், கோத்த மலாக்கா அம்னோ தலைவர் டத்தோ லாதிப் தம்பி சிக் ஆகியோரும் கோத்தா மலாக்கா அம்னோ பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.