அமைச்சர்: படத்திலிருந்து ‘டிஏபியை இழிவுபடுத்தும் காட்சி’ நீக்கப்பட வேண்டும்

filmமலாய்   ரெஜிமெண்ட்   படத்   தயாரிப்பாளர்கள்  அப்படத்தில்   டிஏபியை   இழிவுபடுத்துவதுபோல்   அமைந்துள்ள   ஒரு   காட்சியை   நீக்க  வேண்டும்    என்று   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே   சைட்   கெருவாக்   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மலேசியாகினியிடம்     பேசிய    சாலே,   யுடியூப்பில்    பதிவேற்றம்     செய்யப்பட்டுள்ள    அப்படத்தின்  முன்னோட்டத்தில்  ஒரு  காட்சியில்   “டிஏபி165”  என்ற   எண்பட்டைக்   கொண்ட   ஒரு  கார்  காண்பிக்கப்படுகிறது   என்றார்.

“அது   இன்று   காலை   என்  கவனத்துக்குக்   கொண்டுவரப்பட்டது.  முன்னோட்டத்தைப்   பார்த்ததில்    அக்காட்சி   பொருத்தமற்றிருப்பதாக    தோன்றியது.  அதனால்   அதை   நீக்கிவிடச்   சொன்னேன்”,  என்றார்.

படத்   தயாரிப்பாளர்கள்   எல்லைமீறிச்   சென்றுவிடக்கூடாது    என்றும்   சாலே   நினைவுறுத்தினார்.

முன்னதாக,   முன்னாள்   சட்ட   அமைச்சர்   சைட்  இப்ராகிம்,   எதிரணிக்கு   டாக்டர்   மகாதிர்   முகம்மட்    தலைமை  தாங்குவது   குறித்து   சந்தேகம்   கொள்ளும்   சீர்திருத்தவாதிகளும்    சமூக    ஆர்வலர்களும்    படத்தின்  முன்னோட்டத்தைப்   பார்க்க    வேண்டும்    என்றார்.

“அதைப்   பாருங்கள்.  அதன்   பிறகும்  (பிரதமர்)   நஜிப் (அப்துல்  ரசாக்) பை  விட    மகாதிர்தான்   மக்களாகிய   நமக்கு   மிரட்டலாக   இருக்கிறார்  என்று  நினைத்தால்    எனக்குச்   சொல்லுங்கள்.

“நஜிப்   மீண்டும்   வெற்றி   பெற்றால்     சீர்திருத்தம்   எதுவும்   நடக்காது”,   என்றவர்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

பின்னர்   மலேசியாகினியிடம்   பேசிய    சைட்,  அந்த   முன்னோட்டத்தைப்  பார்த்துக்  கடுப்பானதாகக்  கூறினார்.

“மெர்டேகா  கொண்டாட்டங்களின்போது   சீனர்களை  அதிலும்   குறிப்பாக   டிஏபி-யைத்    தாக்குவதற்கு  மலாய்  ரெஜிமெண்டைப்   பயன்படுத்துவது   வழக்கமாகி   விட்டது”,  என்றவர்  சொன்னார்.

“முன்பு  தாண்டா   புத்ரா,   இப்போது   இது”,  என்றார்.

நாட்டின்    எதிரிகளுடன்   போரிட்டு    உயிர்த்  தியாகம்   செய்துள்ள   ஆயுதப்படையினரைத்      இப்படித்   தவறாகப்   பயன்படுத்திக்கொள்ளக்  கூடாது    என்றவர்  வலியுறுத்தினார்.