குவான் எங் : அருள் கந்தா கூறியதைப் பாஸ் புரிந்துகொண்டதா?

Slide11எம்டிபி  ‘கடன் தீர்வுத்  திட்டங்கள்’  குறித்து  அருள் கந்தா கந்தசாமி அளித்த விளக்கம், பாஸ் மத்திய செயலவையினருக்கு உண்மையில் விளங்கியதா என்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என லிம் குவான் எங் கூறியுள்ளார்.

1எம்டிபி தொடர்பான ஜசெக-வின், குறிப்பாக, பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவின் பல கேள்விகளுக்கு, அருள் கந்தா இன்னும் பதிலளிக்கவில்லை என பினாங்கு முதலமைச்சருமான அவர் கூறினார்.

“பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கூறப்படாத நிலையில், அருள் கூறிய விளக்கத்தை அவர்கள் உண்மையில் புரிந்துகொண்டனரா என எனக்கு தெரியவில்லை,” என ஜசெக-வின் தலைமைச் செயலாளருமான அவர், இன்று பினாங்கில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“அருள் கந்தாவின் விளக்கத்தில் திருப்தியடைந்தது பற்றி பாஸ் விளக்க வேண்டும். காரணம், நாம் அதிகம் இழந்துவிட்டோம், ஆனால் நமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.”

கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தலைமையில்,  பாஸ் செயலவையினர், 1எம்டிபி உயர்மட்ட நிர்வாகத்தினரைச் சந்தித்தனர்.

அந்த வட்டமேசை கலந்துரையாடலுக்குப் பின்,  1எம்டிபி நிறுவனத்தின் சீரமைப்புத் திட்டங்களில் தாங்கள் திருப்தி கொள்வதாக பாஸ் நேற்று அறிவித்தது.

இதற்கிடையே, அமெரிக்க டாலர் $602.725  மில்லியன் மற்றும் அதற்கான வட்டியை, அபுதாபி சர்வதேசப் பெட்ரோலியம் முதலீட்டு நிறுவனத்திற்கு PJSC (ஐ.பி.ஐ.சி)  செலுத்துவதில், 1எம்டிபி நிறுவனம் தோல்வி கண்டது குறித்தும் பாஸ் திருப்தி கொள்கிறாதா என லிம் கேள்வி எழுப்பினார்.

இன்று மதியத்தோடு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியக் காலக்கெடு முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.ஐ.சி. தற்போது ஆகஸ்ட் 31 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாகக் கூறப்படுகிறது.