14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் – பாஸ் ஒத்துழைப்பு இல்லை

Mahathir8எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் 4 உறுப்புக்கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.

நேற்று சுமார் 4 மணி நேரம் நடந்த, பக்காத்தான் – பாஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பானின் தலைமை இம்முடிவை வெளியிட்டுள்ளது. மேலும், தேர்தலில் பாஸ் மற்றும் பாரிசானுடன் மும்முனைப் போட்டியைச் சமாளிக்கும் உத்திகளைக் கண்டறியும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளதாக அது அறிவித்துள்ளது.

பக்காத்தான் கூட்டணியின் தலைவர், டாக்டர் மகாதிர், “மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பிரச்சனைக்கும் நாங்கள் தீர்வு கண்டுவிட்டோம்,” என்று கூறியுள்ளார்.

ரபிஷி ரம்லி உட்பட, பக்காத்தானின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட அச்சந்திப்பில், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கலந்துகொள்ளவில்லை.

பக்காத்தானின் துணைத் தலைவர் சலாஹூடின் அயுப், இதனை நல்லதொரு செய்தி என்றும், உறுதியான ஒரு முடிவு என்றும் வர்ணித்துள்ளார்.

பக்காத்தான் உறுப்புக்கட்சிகளின் ஒட்டுமொத்த முடிவு இதுவென்றும், இம்முடிவை அஸ்மின் அலி தலைமைத்துவத்தின் கீழ் இருக்கும் சிலாங்கூர் உட்பட, அனைத்து மாநிலங்களிலும் கடைப்பிடிக்க உள்ளதாக, அமானாவின் துணைத் தலைவருமான அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஒருசில பிகேஆர் தலைவர்கள் பாஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், அப்பேச்சுவார்த்தையை அன்வார் இப்ராஹிம் மற்றும் கட்சியின் அரசியல் சீர்திருத்தப் பிரிவு ஆதரித்ததாகவும் பிகேஆர் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை, மும்முனைப் போட்டியைத் தவிர்க்க, பாஸுடன் பிகேஆர் தனித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக ஊகங்கள் பரவியதைத் தொடர்ந்து, கட்சியின் அனுமதியுடனேயே அதனை ஏற்பாடு செய்ததாக அஸ்மின் அலி தெரிவித்திருந்தார்.

“பாஸ் கட்சியுடனான அப்பேச்சுவார்த்தை, என் தனி ஒருவனின் முடிவு அல்ல, பிகேஆரின் முடிவு, நான் கட்சியைப் பிரதிநிதித்தேன் அவ்வளவுதான்,” என அஸ்மின் விளக்கப்படுத்தினார்.