பக்காத்தான் ஹராப்பான் ‘அலி பாபா உத்தி’யைப் பயன்படுத்துகிறது, பிரதமரின் உதவியாளர் கூறுகிறார்

tengkuஹராப்பானின் ‘மேலாதிக்கக் கட்சி’யான ஜசெக-வும், புத்திசாலித்தனமாக அரசியல் காய் நகர்த்தும் ‘நடைமுறை தலைவர்’-ஆன லிம் கிட் சியாங்கும், பக்காத்தான் ஹராப்பானின் தோற்றத்தை வடிவமைக்கின்றனர் என பிரதமரின் பத்திரிக்கைச் செயலாளர் தெங்கு ஷரிஃபுடின் தெங்கு அஹ்மாட் கூறியுள்ளார்.

அலி பாபாவின் உத்தியைப் போன்று, மலாய் தலைவர்களை முன்னணியில் வைத்துவிட்டனர், ஆனால், உண்மையான “சக்தி வாய்ந்த தரகர்”  (power broker) திரைக்குப் பின்னால் இருந்து இயக்குகிறார் என்று தெங்கு ஷரிஃபுடின் கூறினார்.

“எனினும், அந்த அழுக்கு உத்திகள் மலாய்க்காரர்களின் அறிவுத்திறனை அவமதிப்பதாக உள்ளதால், மலாய்க்காரர்கள் இன்று அத்தந்திரங்களை உணரத் தொடங்கியுள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

“ஜசெக-வும் கிட் சியாங்கும் இந்தத் தந்திர விளையாட்டை ஏன் ஆடுகின்றனர்?

பக்காத்தானில் அன்வார் இப்ராஹிமின் செல்வாக்குக் குறைந்து வருவதால், ஹராப்பானின் முகமூடியாக முன்னிலைப்படுத்த, அவர்களுக்கு ஒரு புதிய மலாய்க்காரத் தலைவர் தேவை,” என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

மலாய்க்காரர்கள் அவர்களை முழுமையாக ஆதரிக்க மாட்டார்கள் என்று ஜசெக-வுக்கும் கிட் சியாங்குக்கும் தெரியுமென்றும் அவர் தெரிவித்தார்.

அவர்கள் ஹராப்பான் கூட்டணியில் இருந்த வான் அஷிஷாவையும் (பிகேஆர்), முகமட் சாபுவையும் (அமானா) நம்பவில்லை, மாறாக, புதிதாக பெர்சத்து-வுடன் கூட்டணி அமைக்க விரும்பினர். இதற்குக் காரணம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகாதீர் போட்டியிட மாட்டார் எனவும், பெர்சத்து கட்சிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதிதான் உள்ளது என்றும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார்.

டாக்டர் மகாதீர் பக்காத்தான் ஹராப்பானுக்குத் தலைமையேற்க, ஜசெக ஒப்புதல் அளித்தது, அது பிகேஆர் மற்றும் அமானாவை அவமதிப்பதாகும் என்றும் அவர் கூறினார்.

“மகாதீரின் அனுபவத்தையும் செல்வாக்கையும் அடிப்படையாகக் கொண்டு, ஜசெகவும் கிட் சியாங்கும் maha-limஇந்த முடிவை எடுத்தனர் என்றால், அது பாசாங்குத்தனமானது. காரணம், இதற்கு முன் எதிர்க்கட்சியினர் இந்த மகாதீரை எதிர்த்தே ‘மறுமலர்ச்சி இயக்க’த்தைத் தொடங்கினர்,” என்றார் அவர்.

கிட் சியாங் தன்னைச் சிறையில் தள்ளிய, பழைய விரோதியுடன் கைக்கோர்த்துள்ளார் என்றால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்களின் கோட்டையாக இருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதே அவர் நோக்கமாக இருக்க வேண்டும்.

மலாய்க்காரர்களின் மனதைக் கவர, ஜசெக இப்போது மகாதீரைப் பயன்படுத்துகிறது.

ஆக, பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பது, ஜசெக-வுக்கு வாக்களிப்பதற்கு ஈடாகும் என்பதுதான் உண்மை.

“எதிர்க்கட்சியின் பின்னால் இருக்கும் உண்மையான சக்தி ஜசெக மட்டுமே என்ற உண்மை நிலையையும், அதன் சூத்திரதாரி லிம் கிட் சியாங்தான் என்பதையும் மலாய்க்காரர்கள் உணர்ந்துவிட்டதால், இப்போது ஜசெக பீதியில் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.