மலேசியர்கள் காலஞ்சென்ற கெடா சுல்தானுக்கு இறுதி மரியாதை தெரிவித்தனர்

kedah காலஞ்சென்ற   கெடா  ஆட்சியாளர்,  சுல்தான்   அப்துல்   ஹாலிம்   முவாட்ஸாம்   ஷாவின்  நல்லுடல்    மக்கள்   இறுதி   மரியாதை   தெரிவிப்பதற்காக    கெடா    இஸ்தானா   அனாக்   புக்கிட்-டில்    வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள்  காலை  மணி   11-இலிருந்து   பிற்பகல்   12.30வரை    இறுதி  மரியாதை   தெரிவிக்க   அனுமதிக்கப்பட்டனர்.  அதன்  பின்னர்  பெருமக்கள்   12.30-இலிருந்து  பிற்பகல்   1.30வரை  அங்கு   சென்று   இறுதி  மரியாதை   தெரிவித்துக்  கொண்டார்கள்.

சுல்தான்  அப்துல்   ஹாலிம்,   நேற்று   பிற்பகல்   மணி   2.30க்கு   இஸ்தானா    அனாக்  புக்கிட்டில்   காலமானார்.

பலதரப்பட்ட   மக்களும்   காலையிலேயே    அரண்மனையில்   திரண்டு   விட்டனர்.

முகம்மட்   கமால்   சே  லா,   எங்கே  இறுதி  மரியாதை    தெரிவிக்க   முடியாமல்   போய்விடுமோ   என்று  அஞ்சி    அதிகாலையிலேயே  வந்து  விட்டார்.

“கெடா  மைந்தனான    நான்   59  ஆண்டுகள்  கெடாவை   ஆண்ட  துவாங்குக்கு   இறுதி  மரியாதை   தெரிவிக்கும்  வாய்ப்பை  இழக்க   விரும்பவில்லை”,  என்றாரவர்.

பணி  ஓய்வு   பெற்ற   ஆசிரியர்  டெய்   சியு  கீ, 62,   தான்  பொருளாளராகவுள்ள    செயிண்ட்   ஜான்   சங்கத்தின்    புரவலராக   இருந்தவர்   சுல்தான்   அப்துல்  ஹாலிம்  என்றார்.

“அவருடன்  (ஒரு  விருந்தில்)  ஒரே  மேசையில்   அமர்ந்திருந்ததை   மறக்க  முடியாது.

“துவாங்கு  இறந்ததைக்  கேட்டதும்   கண்ணீரைக்   கட்டுப்படுத்த  முடியவில்லை.  அவருக்கு  இறுதி  மரியாதை   தெரிவிக்க  வந்தேன்”,  என்றார்.

-பெர்னாமா