பாஸுடன் பேச்சுகள்: ‘அன்வாரின் நிலைப்பாடு குறித்து அவரிடமே விளக்கம் கேட்பது நல்லது’

leongதேர்தல்  தொகுதிப்  பங்கீடு   தொடர்பாக   பக்கத்தான்     ஹரபான்    பாஸ்   கட்சியுடன்  தொடர்ந்து  பேச்சு   நடத்த   வேண்டும்   என்று   சிறையில்   உள்ள   எதிரணித்   தலைவர்  அன்வார்  இப்ராகிம்   கூறியிருப்பது   குறித்து  அவரிடமே  விளக்கம்   கேட்பது  நல்லது   என்கிறார்   பிகேஆர்   எம்பி   வில்லியம்   லியோங்.

அது,  பாஸுடன்  பேச்சுகள்  இனி  இல்லை  என்று   பக்கத்தான்   ஹரபான்   செய்துள்ள  முடிவுடன்  முரண்படும்   அன்வாரின்  கடிதத்தால்   எழுந்துள்ள   சர்ச்சைக்கு   ஒரு  முற்றுப்புள்ளி  வைக்கும்.

“(ஹரபானும்    அன்வாரும்    எடுத்த) முடிவுகள்    முரண்படுவதாகத்   தோன்றுகின்றது.  இதன்  தொடர்பில்  ஹரபான்   தலைவர்   மன்றம்   பிகேஆரிடம்  விளக்கம்  பெற  விரும்பலாம்”,  என   பிகேஆர்   உச்சமன்ற    உறுப்பினரான  லியோங்   கூறினார்.

இவ்விசயத்தில்    ஒரு  கட்சி (அன்வார்)  முடிவைவிட   ஹராபான்  முடிவு மேலானது.  ஆனாலும்,  கலந்து  பேசுவது   நல்லது.  ஏனென்றால்,  ஹரபான்  ஒருமித்த  முடிவின்   அடிப்படையில்தான்   செயல்படுகிறது.

பிகேஆர்  அதன்  அடிநிலை  உறுப்பினர்கள்   மற்றும்   பொதுமக்களின்   கருத்துகளைத்   தெரிந்து  கொள்வது   அவசியம்   என்று  லியோங்   கூறினார்.  அவர்கள்   பாஸுடன்  பேச்சுகளை   நிறுத்துவதுதான்  நல்லது    என்று  நினைப்பதாக    ஊடகங்கள்   செய்த   கருத்துக்கணிப்புகள்   காட்டுகின்றன   என்றாரவர்.

“பிகேஆர்,  மக்கள்   என்ன   நினைக்கிறார்கள்   என்பதை   அறிதல்   முக்கியம்.   அதை   இன்றே   தெரிந்துகொள்வது   நல்லது   இல்லையேல்   வாக்களிப்பு   நாளின்போது   ஏமாந்துபோக   நேரும்.

“மக்கள்   அதிருப்தி  அடைந்தால்,   ஒன்று   அவர்கள்    (ஹரபானுக்கு)   எதிராக   வாக்களிப்பார்கள்    அல்லது   வாக்களிக்கவே   வர  மாட்டார்கள்”,  என்றாரவர்.