எம்.ஏ.சி.சி. : 2008-ல் இருந்து, உறுப்பினர்கள் அதிகரிப்புக்காகக் காத்திருக்கிறோம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), 2008-ல் தொடங்கப்பட்ட போது உறுதியளித்தது போல், தங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5,000-மாக உயர்த்த வேண்டுமென விரும்புவதாக அதன் துணை ஆணையர் கூறினார்.

எம்.ஏ.சி.சி.-யின் துணை ஆணையர் (தடுப்பு) ஷாம்ஷுன் பஹாரின் முகமட் ஜமில், தற்போது உள்ள 2,800 பணியாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும், அதனால், தங்கள் பணிகளைத் திறன்பட, விரைவாக செய்து முடிக்க முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

“9 ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஊழல் எதிர்ப்பு இலாகா’-ஐ (பீபிஆர்), ‘மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்’-ஆக (எம்.ஏ.சி.சி.), மாற்றப்பட்டபோது, ஹாங்காங்கில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தைப் போல், குறைந்தபட்சம் 5,000 உறுப்பினர்களாக அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது, ஆனால் இன்றுவரை அந்த எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை.

“ஊழல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டங்களை அமல்படுத்துவதற்கும், அமலாக்கம் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கவும், எம்.ஏ.சி.சி.-க்கு ஆள்பலம் போதுமானதாக இல்லை, ஆணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று, நேற்றிரவு நடந்த பீ.பி.ஆர்./ எம்ஏசிசி-யின் 50-வது ஆண்டு வட்டமேசைக் கூட்டத்தில் அவர் பேசினார்.