‘டெங்கி’ காய்ச்சல் – முதலிடத்தில் இருக்கும் சிலாங்கூருக்கு உதவ பிரதமர் தயார்

‘டெங்கி’ பிரச்சனைக்குத் தீர்வு காண, வடிகால் மற்றும் வடிகால் அமைப்புகளை நிர்வகிப்பதில் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு உதவ, பிரதமர் நஜிப் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கத் தெரியாமல், நாட்டின் மிக அதிகமான டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவான மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது. பக்காத்தான் ராக்யாட் நிர்வாகம், இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியாமல் இருப்பதன் காரணமாக, இந்தச் சலுகை வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

“மாநில அரசாங்கம் குப்பை அகற்றுதல், வடிகால் மற்றும் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் இடங்களைக் கண்காணிக்க வேண்டும். வருடத்திற்கு 40,000 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின்றன, அதாவது, ஒரு நாளைக்கு 100 சம்பவங்கள்,” என்றார் அவர்.

இப்பிரச்சனையை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்றால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாநில அரசை பாரிசானிடம் ஒப்படைத்து விடுவது நல்லது என்றும், இன்று சௌஜானா உத்தாமாவில், ‘என் அழகிய சுற்றுப்புறம்’ எனும் திட்டத்தைத் தொடக்கி வைத்து அவர் பேசினார்.

“இந்தப் பதிவு (டெங்கிக் காய்ச்சல் & ஏடிஸ் கொசு) பெருமைப்படக்கூடிய ஒன்றல்ல. நம்மால் வேலை செய்ய முடியவில்லை என்றால், நாம் நிர்வாகத்தை மாற்றிவிட வேண்டியதுதான். ஆனால் இன்று, இப்பகுதியைச் சுத்தம் செய்ய நாம் அவர்களுக்கு உதவுவோம்,” என்றும் அவர் கூறினார்.

சுபாங் விமான நிலைய மசூதியின் முன்னாள் பணியாளர்களின் வீடுகள் உடைக்கப்பட்டது தொடர்பில் கருத்துரைத்தபோது, வீட்டை இடித்துத் தள்ளுவது அரசாங்கத்தின் நடைமுறையல்ல,  அந்த இமாம் மற்றும் பிலாலின் வீடுகள் சுத்தமாக இருந்திருந்தால் அவை உடைக்கப்பட்டிருக்காது என்றார் நஜிப்.

“நாங்கள் அவர்களின் வீடுகளை உடைக்கவில்லை, ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களையே அழித்தோம்,” என்றும் நஜிப் தெரிவித்தார்.