எம்.டி.யூ.சி. : வெளிநாட்டு தொழிலாளர்கள் இறக்குமதி விதிமுறையைத் தளர்த்தும் அமைச்சரவை முடிவை இரத்து செய்ய வேண்டும்

மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி), உற்பத்தித் துறையில் 100% வெளிநாட்டு தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தும் விதியை இலகுவாக்குவதற்கான முடிவை இரத்து செய்யுமாறு அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அமைச்சரவையின் இந்த முடிவு, அதிர்ச்சி அளிப்பதாகவும், இது முற்றிலும் நியாயமற்ற ஒரு முடிவு என்றும் எம்.டி.யூ.சி.-யின் தலைமைச் செயலாளர், ஜெ.சோலமன் கூறினார்.

உள்துறை துணையமைச்சர் நூர் ஜஸ்லானின் இந்த அறிக்கை, வெளிநாட்டு தொழிலாளர்களைக் குறைக்க வேண்டும் எனும் கொள்கையிலிருந்து, அரசாங்கம் பின்னோக்கி செல்வதையே காட்டுவதாக எம்.டி.யூ.சி. எண்ணுகிறது.

“வெளிநாட்டு தொழிலாளர்களையே அதிகம் நம்பியிருக்கும் போக்கைக் குறைக்க, அவர்களை வேலைக்கு எடுக்கும் விதிமுறைகளை இறுக்கமாக்க வேண்டுமே ஒழிய, தளர்த்தக் கூடாது”, என்று சோலமன் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, 100% வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதி அளிக்க, அரசாங்கம் கருதுகிறது என்று நூர் ஜஸ்லான் இதற்குமுன் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், வெளிநாட்டு தொழிலாளர்களைக் கட்டங்கட்டமாகக் குறைக்க உள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

“எனவே, திடீரென்று உற்பத்தி துறைக்கு 100% வெளிநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்யும் வகையில், ஒரு சிறப்பு கொள்கை எதற்காக?”, என சோலமன் கேள்வி எழுப்பினார்.

இந்நடவடிக்கையானது, வேலை சந்தையின் மோசமான அறிகுறிகள் மட்டும் இல்லை, உள்ளூர் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகபட்சம் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கொள்கையானது, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கான, ஒரு நியாயமான மற்றும் முறையான சம்பளத் தரத்தைப் பெறும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மறுக்கும் என்று அவர் கூறினார்.

“உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதோடு, அரசாங்கம் நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் RM1,800-ஐ, உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று எம்.டி.யூ.சி. விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

இலாப நோக்கத்திற்காக செயற்படும் சில தரப்பினரின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்யப்படுவதை  எம்.டி.யூ.சி. உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, அரசாங்கம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சோலமன் கூறினார்.

நேற்று ஓர் அறிக்கையில், உற்பத்தி துறைகளில் 100% வெளிநாட்டுத் தொழிலாளர்களின்  பங்கேற்பை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய  வேண்டுமென்று, மலாய் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTEM)  கேட்டுக்கொண்டது.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. அதோடுமட்டுமின்றி,  நாட்டில் திறமையான மனிதவள மேம்பாட்டில், குறிப்பாக, உற்பத்தித் துறைகளில் இது   வீழ்ச்சியை  ஏற்படுத்தும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி, அஹ்மட் யஷிட் ஒத்மான் கூறினார்.