மாபுஸ்: பாஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டால், அது மக்களுக்குத் துரோகம் இழைத்ததாகும்

பக்கத்தான் ஹரப்பானுடன் தொடர்ந்து உறவு பாராட்டி வரும் பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் 14 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என்று பாஸ் அறிவுத்துள்ளது பற்றி கருத்துரைத்த மாபுஸ், தாம் போட்டியிட அனுமதிக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன் என்று கூறினார்.

“என்னை வேட்பாளராக நியமிக்காததற்கு நன்றி கூற விரும்புகிறேன், ஏனென்றால் பாஸ் என்னை நியமித்திருந்தாலும்கூட, நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் ஏனென்றால் அது மக்களுக்குத் துரோகம் செய்வதாகும்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பாஸ் கட்சியின் தற்போதைய செயல்திட்டமெல்லாம் பிஎன் வெற்றி பெற உதவுவதாகும் என்று கூறிய மாபுஸ், தாம் அதில் ஓர் அங்கமாக இருக்க விரும்பவில்லை என்றார்.

பாஸ் 40 நாடாளுமன்ற இருக்கைகளை மட்டும் பெற விரும்புகிறது. அது பிஎன் தொடர்ந்து ஆட்சியில் இருக்க உதவும். “பாஸ் என்னை நியமித்தால், நான் அதை நிராகரிப்பேன்”, என்றாரவர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமனாவின் வேட்பாளராக இருப்பீர்களா என்ற கேள்விக்கு சற்று தயக்கத்துடன் பதில் அளித்த மாபுஸ், அக்கேள்வி இன்று எழவில்லை என்று கூறினார்.

மாபுஸ் நேற்று கெடாவில் நடைபெற்ற அமனாவின் இரண்டாவது தேசிய மாநாட்டில் இருந்தார்.