இர்வான் செரிகார் : அரசாங்கம் இன்னும் எண்ணெய் விலைக்கு மானியம் அளிக்கிறது

2014-ஆம் ஆண்டிலேயே அகற்றி இருக்க வேண்டிய, எண்ணெய் விலைகான மானியத்தை அரசாங்கம் இன்னும் வழங்கி வருவதாக, 2018 வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் பங்கேற்பாளர்கள் கூறினர்.

குறிப்பாக, வாராந்திர விலையில் சரிசெய்தலின் போது, எண்ணெய் விலை உயர்ந்தால், அம்மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகக் கருவூலத் தலைமைச் செயலாளர், இர்வான் செரிகார் கூறினார்.

“எண்ணெய் விலை நிர்ணயத்தை நாங்கள் நடைமுறைபடுத்திவரும் போதிலும், அரசாங்கம் இன்னும் மானியங்களை வழங்கிவருகிறது. மக்களுக்குச் சுமையைக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எண்ணெய் விலை உயரும் காலத்தில், நாங்கள் மானியங்களை வழங்குவோம். மாதம் ஒன்றிற்கு பல நூறு மில்லியன் ரிங்கிட் இதற்கு செலவழிக்கப்படுகிறது,” என்றார் அவர்.

“அதை தொடர்ந்து செய்வோமா என்பது எனக்குத் தெரியாது, ஆனால், இப்போது நாம், பெரிய அளவில் இல்லையென்றாலும், எண்ணெய் விலைக்கு மானியம் கொடுத்து வருகிறோம்,” என்றார்.

“அறிவார்ந்த மானியத் திட்டம் (2014) அறிமுகமாவதற்கு முன், ஆண்டுக்கு 22 பில்லியன் ரிங்கிட் இதற்காக செலவழிக்கப்பட்டது,” என்றும் இன்று நடந்த அந்த விவாத மேடையில், கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் கூறினார்.

வாராந்திர எண்ணெய் விலை நிர்ணய முறை, இந்த ஆண்டு மார்ச் 29-ம் தேதி தொடங்கியது. வருடத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேமித்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியாக இது நடைமுறைபடுத்தப்பட்டது.

இதற்கிடையில், அனைத்து பட்ஜெட் நடவடிக்கைகளையும் செயல்படுத்தும் பணிகளை மேற்பார்வையிடும் குழுவிற்கு, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா தலைமை தாங்குவார் என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று காலை அறிவித்ததாகவும் இர்வான் தெரிவித்தார்.

தேசிய பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட நிரல்படி, அரசு நிறுவனங்கள் அனைத்து திட்டங்களையும் அமல்படுத்துவதை அக்குழு உறுதிப்படுத்தும் என அலி ஹம்சாவுக்குத் துணையாக நியமிக்கப்பட்டுள்ள இர்வான் மேலும் கூறினார்.