அம்பிகா மற்றும் கிளேர் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தந்திரம், ஸைட் கூறுகிறார்

 

வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா மற்றும் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரௌன் மீதான தாக்குதல்கள் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் என்று ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.

இது ஏன் என்றால் பாஸ் வேகமாக ஆதரவை இழந்து வருகிறது. அடுத்த தேர்தலுக்கு அம்னோவுடன் இணைந்து வேலை செய்யும் அவர்களது திட்டத்தில் இது ஒன்றல்ல என்று ஸைட் அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

பிரதமர் நஜிப்பிடமிருந்து பாஸ் ரிம90 மில்லியன் பெற்றதாக ரியுகாஸல் எழுதியிருந்த கட்டுரைக்கு ஆதாரம் அம்பிகா என்று அவர் பெயர் குறிப்பிட்டிருந்ததற்கான எதிர்வினைகள் குறித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரான ஸைட் கருத்துரைத்தார்.

கிளேருக்கு எதிராக யுகேயில் பாஸ் தலைவர் ஹாடி தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் கிளேர் அக்டோபர் 11இல் தாக்கல் செய்த அவரது தற்காப்பு அறிக்கையில் இதனைக் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் அது குறித்து கருத்துரைக்க அம்பிகா மறுத்து விட்டார். ஆனால், பல பாஸ் தலைவர்களும் பிரதமர் அலுவலக அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலானும் அவர் பதிலளிக்க வேண்டும், அம்பிகாவின் ஆதாரம் வெளியிடப்படுதல் உட்பட, என்று அம்பிகாவுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

யுகேயில் நடக்கும் தற்போதைய சட்டப் போராட்டம் ரியுகாஸல்-பிரௌனுக்கும் ஹாடிக்கும் இடையிலானது.

இது உங்களுக்குத் தெரியாமல் இருந்தால், இப்போராட்டம் கிளேர் மற்றும் அம்பிகா ஆகிய இருவருக்கும் அப்துல் ரஹ்மான் மற்றும் அம்னோ வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் நடக்கும் வழக்கு என்று நினைத்து விடுவீர்கள், ஏனென்றால் இன்டர்நெட் செய்திகள் அவ்வாறாக இருக்கின்றன என்று ஸைட் கூறுகிறார்.

இந்த வழக்கில் அம்னோவின் அக்கறை என்ன என்று ஸைட் கேட்கிறார்.

பாஸ் தலைவர்களிடம் இருக்கும் செல்வ வளம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டவர் அம்பிகா ஒருவர் மட்டுமல்ல. ‘எனக்கும்கூட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புகைப்படங்களை என்னிடம் காட்டியுள்ளனர்…” என்று ஸைட் மேலும் கூறினார்.