சிலாங்கூரில் பி.என். ஏன் தோல்வியடைந்தது? –  மாட் தையிப்புக்கு மந்திரி பெசார் அலுவலகம் பதிலளித்தது

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் பிஎன் தோல்வி அடைந்ததைப் பற்றி, முன்னாள் மந்திரி பெசார், முஹம்மது முஹம்மது தாயிப், இன்று கேள்வி எழுப்பினார்.

அம்மாநிலம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், புத்ராஜெயா மற்றும் எல்.ஆர்.டி. என, பிஎன் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டபோதிலும் எதனால் தோல்வியுற்றது என்று குழப்பமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இன்றிரவு, மந்திரி பெசார் அஸ்மின் அலியின் அலுவலகம் அதற்கு பதில் அளித்தது.

முஹம்மதுவை “மறுசுழற்சி அரசியல்வாதி” என்று குறிப்பிட்டு, மந்திரி பெசார் அலுவலகத்தின் தகவல்தொடர்பு இயக்குனர், யின் ஷாவோ லோங் கூறுகையில், ஏற்கனவே அதற்கான பதில் பொதுவில் அறியப்பட்ட ஒன்றுதான் என்று கூறுகிறார்.

“மார்ச் 2008 வாக்கில், பல தசாப்தங்களாக ஊழல், வீண் செலவுகள், தவறான நிர்வாகம் ஆகியவற்றால் விரக்தியடைந்த சிலாங்கூர் வாக்காளர்கள், அம்னோவும் பி.என்.-உம் பொருத்தமற்றது என்பதை உணர்ந்தனர்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மக்கள் சாலை, உள்கட்டமைப்பு, நீர் வழங்கல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றைப் பற்றி நினைக்காமல் இல்லை என்றும் கூறினார்.

“இந்த அடிப்படை வசதிகள் கூட, அரசியல்வாதிகளின் உறவினர்களுடனான ஒரு ஒப்பந்தம் மூலமே தங்களை வந்துசேர்கின்றது என்பதை அறிந்து, அவர்கள் கவலை கொண்டனர்.

“இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அரசியல்வாதிகள், பணத்தைத்  துணிபைகளில்  வைத்துகொண்டு, நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் சுலபமாக வந்து போவதைக் கண்டு, அவர்கள் கவலை கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

1987-ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் நியூசிலாந்து நாட்டு நாணயம், 1 மில்லியன் அமெரிக்க டாலரில் கொண்டுவந்ததற்காக, பிரிஸ்பேன் விமான நிலையத்தில் முஹம்மது கைது செய்யப்பட்டதைத் தெளிவாக குறிப்பிடுவதாக இக்கூற்று இருந்தது.