அம்னோ இனவாதப் பேச்சைக் குறைக்க வேண்டும்: கெராக்கான் தலைவர் அறிவுறுத்து

14வது   பொதுத்   தேர்தலுக்காக   அதன்   உறுப்பினர்களை  ஒன்றிணைப்பதில்  முழுமூச்சாக   ஈடுபட்டுள்ள  அம்னோ   மலாய்க்காரர்கள்  ஒன்றுபட   வேண்டும்   என்று  முழக்கமிட்டு  வருவதற்குப்   பதிலாக  ஒட்டுமொத்த   மலேசியர்களையும்   கவர்வதற்கு   முனைப்புக்    காட்டினால்    நன்றாக   இருக்கும்    என  பாரிசான்   நேசனல்   பங்காளிக்    கட்சிகளில்    ஒன்றான   கெராக்கான்  தலைவர்  ஒருவர்    மொழிந்துள்ளார்.

கெராக்கான்  இளைஞர்   துணைத்   தலைவரான   எண்டி    யோங்,   இன்று  முகநூலில்   புத்ரா   உலக   வணிக  மையத்தில்    நடைபெறும்   அம்னோ   பொதுப்பேரவை  படமொன்றைப்  பதிவேற்றம்    செய்திருந்தார்.  அப்படத்தில்  பெரிய   பதாதை  ஒன்று  காணப்படுகிறது.  அதில்  “Bersatu Melayu”(மலாய்க்காரர்களே  ஒன்றுபடுவீர்)   என்ற   சுலோகம்  காணப்படுகிறது.

“ஒரு  அமைப்பு   ‘பெர்சத்து  ஈபான்’  அல்லது  ‘பெர்சத்து   இந்தியா’   அல்லது   ‘பெர்சத்து    சீனா’   அல்லது   பெர்சத்து    கடாசான்’    என்று    எழுதப்பட்ட   பதாதைகளைக்   காட்சிக்கு   வைத்திருந்தால்   எதிர்வினை  எப்படி  இருக்கும்   என்பதை     எண்ணிப்   பார்க்கிறேன்”,  என்றார்  யோங். “நான்  சொல்வதைத்   தப்பாக   புரிந்து  கொள்ளாதீர்கள்.  இனத்தைப்  பற்றியோ   சமயத்தைப்   பற்றியோ   நான்   எதுவும்   சொல்ல   வரவில்லை. ‘பெர்சத்து   ரக்யாட்   மலேசியா(னலேசிய  மக்களே  ஒன்றுபடுங்கள்’  #1மலேசியா   என்றிருந்தால்   நன்றாக   இருந்திருக்குமே  என்றுதான்   சொல்ல   வந்தேன்”,  என்றார்.

இதனிடையே,  தேசிய   விசுவாசிகள்   சங்கமும்  (பெர்சத்துவான்  பேட்ரியோட்   கெபாங்சான்)   அம்னோ  கட்சியினர்  அவர்களின்   உரைகளில்    இன  உணர்வுகளைத்   தூண்டிவிடாமல்   நாட்டு  மக்களை  ஒன்றிணைக்கப்   பாடுபட  வேண்டும்  என்று   கேட்டுக்கொண்டிருக்கிறது.