போரெக்ஸ் ஆர்சிஐ சம்பந்தமாக நஜிப், அரசாங்கம் மீது மகாதிர் வழக்கு தொடர்கிறார்

1990களில் அந்நியச் செலாவணி நட்டம் குறித்து விசாரணை நடத்திய அரச ஆணையத்தின் (ஆர்சிஐ) ஆறு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை முழுமையானதாக இல்லாததால் அவர்களுக்கு எதிராக முன்னாள் பிரதமர் மகாதிர் ஒரு வழக்கை இன்று பதிவு செய்தார்.

அந்த ஆணையத்தின் ஆறு உறுப்பினர்கள் – முகமட் சிடெக் ஹசான், கமாலுடின் முகமட் சைட். தஜுடின் அடான், சா சூன் பூன், கே. புஸ்பநாதன் மற்றும் யூசோப் இஸ்மாயில் – ஆகியோருடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தையும் மகாதிர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை ஹனிப் காதிரி வழக்குரைஞர் நிறுவனம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தது.

ஆர்சிஐ சட்டப்படி முறையானதல்ல, அது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல ஏனென்றல் சாட்சிகள் எழுத்து மற்றும் வாய்மொழி மூலம் அளித்த சாட்சியங்கள் அதில் அடங்கவில்லை என்ற பிரகடனத்தை மகாதிர் கோருகிறார்.

மேலும், வழக்கின் செலவுத் தொகையை பிரதிவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோருகிறார்.

ஆர்சிஐயிடம் மகாதிர் தாக்கல் செய்திருந்த 495 பக்க சாட்சியம் ஆர்சிஐ அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

மகாதிரின் வழக்குரைஞர் ஹனிப் கதாரி அப்துல்லா ஆர்சிஐயின் அறிக்கை அரைவேக்காடான கதைகளைக் கொண்டுள்ளது என்று மலேசியாகினியிடம் கூறியுள்ளார்.