ஐஜிபி: இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை தேடிக்கண்டுபிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

இந்திரா காந்தியின் இளைய மகளை அவரிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டதாகப் கூறப்படும் கே. பத்மாநாதன் @ முகம்மட் ரித்துவான் அப்துல்லா பற்றி ஊகங்கள் எதுவும் கூற வேண்டாம் என்று போலீஸ் மக்களுக்கு ஆலோசனை கூறுகிறது.

முகம்மட் ரித்துவானை தேடிக்கண்டுபிடிக்க போலீஸ் பல பரிவுகளை களமிறக்கியுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் பூஸி இன்று கூறினார்.

இது ஓர் உணர்ச்சிப்பூர்வமான விவகாரம். ஊகங்கள் பொது ஒழுங்கு மற்று தேசியப் பாதுகாப்பைப் பாதிக்கும் என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஈப்போ உயர்நீதிமன்றம் மே 30, 2014 இல் விடுத்திருந்த உத்தரவுப்படி முகம்மட் ரித்துவானை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று பூஸி தெரிவித்தார்.

தமது முன்னாள் கணவரை தேடிக்கண்டுபிடித்து கைது செய்யாமல் இருப்பதற்கு போலீசுக்கு எந்த காரணமும் இல்லை என்று இந்திரா காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு பூஸி இவ்வாறு கூறினார்.

ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வதற்கு பெற்றோர்கள் இருவரும், இஸ்லாத்திற்கு மதம் மாறிய மற்றும் மதம் மாறாத இருவரும், இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று பெடரல் நீதிமன்றம் ஜனவரி 29 இல் தீர்ப்பு அளித்தது.

2010 ஆம் ஆண்டில், ஈப்போ உயர்நீதிமன்றம் இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளையும் அவரது முழு பராமரிப்பில் இருக்க உத்தரவிட்டதுடன் இளைய மகள் பிரசன்னா டிக்சாவை அவருடைய முன்னாள் மனைவி இந்திரா காந்தியிடம் ஒப்படைக்கும்படி ரித்துவான் அப்துல்லாவுக்கு உத்தரவிட்டது.

2016 ஆம் ஆண்டில், பெடரல் நீதிமன்றம் பிரசன்னா டிக்சாவை ஈப்போ உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அவரது முன்னாள் மனைவியிடம் ஒப்படைக்கத் தவறியதற்காக முகம்மட் ரித்துவானை கைது செய்யும்படி போலீஸ் படைத் தலைவருக்கு (ஐஜிபி) உத்தரவிட்டது.