பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், இளைஞர் நாடாளுமன்றம் வலியுறுத்து

பாலியல் துன்புறுத்தல் சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இளைஞர் நாடாளுமன்றம் அரசாங்கத்தை, இன்று வலியுறுத்தி உள்ளது.

தற்போது, மலேசிய சமூகத்தில் அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க எந்தக் குறிப்பிட்ட சட்டமும் இல்லை என்று பினாங்கு பிரதிநிதி அஹ்மாட் ஷாகி ஷா ஹேடன் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவை உதாரணமாகக் கூறிய அவர், முறையான சட்டம் ஒன்று இருந்தால், பாதிக்கப்பட்டவரைப் பாதுகாக்கவும், நீதி கிடைக்கவும் அதிகாரிகள் அது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றும் கூறினார்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை, குறிப்பாக பெண்களைப் பாதுகாப்பதற்காக பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு சமீபத்தில் கோரிக்கை வைத்தது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர்; வெட்கம் மற்றும் பயம் காரணமாக புகார் செய்ய தயங்குகின்றனர். எனவே, விரிவான ஒரு புகார் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அஹ்மட் ஷாகி தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு, இரண்டு நாள்களுக்கு நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்றம் நேற்று ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.