நாளை முஹிடினின் கோட்டையைப் பிரதமர் ‘தாக்குவார்’

நாடாளுமன்ற களைப்பு எப்போது என்று உறுதியாகத் தெரியாவிட்டாலும், அனைத்து கட்சிகளிடையேயும் பொதுத் தேர்தல் சூடு பறக்கத் தொடங்கிவிட்டது.

அந்தச் சூழ்நிலையில், பிரதமர் நஜிப் ரசாக் மக்களைச் சந்திக்கச் செல்லவுள்ளார். நாளை, பிரதமர் ஓர் உயர்மட்டப் பகுதியான, பாகோவில் காலடி எடுத்து வைக்கப்போகிறார்.

ஜொகூரின் வட மாவட்டமான பாகோவின் எம்.பி., பிரதமருடன் ஏற்பட்ட முரண்பாடால் பிரிந்து சென்று, மலேசியா பிரிபூமி பெர்சத்து கட்சி பிறந்த இடம் அது.

கடந்த 7 தவணைகளாக, முஹிடின் யாசின் எம்பியாக இருந்துவரும் அத்தொகுதிக்கு, நாளை பிரதமர் நஜிப் வருகை புரியவுள்ளார்.

பாரிசானின் கோட்டையாக இருக்கும் ஜொகூரை, முதன்முறையாக எதிர்க்கட்சியினர்  கைப்பற்ற சாத்தியம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை காலை, பிரதமர் நஜிப் செல்லவுள்ள முதல் இடம், ஃபெல்டா மாஓகில். அங்கு சம்பந்தப்பட்ட ஃபெல்டா குடியேறிகளுக்கு, நஜிப் நிலப்பட்டா கொடுக்கவுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் பிரதமர் வருகையை எதிர்பார்த்துள்ளனர்

பாகோ மட்டுமல்லாமல், பிஎன் ஆதரவாளர்கள் இடம் எனக் கருதப்படும், எதிர்க்கட்சியினர் நுழைய முடியாத, மற்ற ஃபெல்டா பகுதிகளுக்கும் அவர் செல்லவுள்ளார்.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு, முதன் முறையாக நஜிப் பாகோ வருவதாக அத்தொகுதி அம்னோ தலைவர், இஸ்மாயில் மொஹமட் கூறினார்.

தேர்தல் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் இந்நேரத்தில், பிரதமரின் வருகை நிச்சயமாக அம்னோவிற்குத் தார்மீக ஆதரவைத் தூண்டுவதோடு; உள்ளூர் வாக்காளர்களின் ஆதரவையும் ஊக்குவிக்கும்.

பெர்சத்து கட்சியின் ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியான பாகோவில், நாளை பிரதமரை வரவேற்க 3,000 ஃபெல்டா குடியேற்றவாசிகளோடு, பாரிசான் தேர்தல் இயந்திரம், வாக்காளர்கள் என சுமார் 7,000 பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்மாயில் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.