ஜாஹிட் : ‘சிறந்ததைச் செய்ய முடியவில்லை என்றால், பின்வாங்க நான் தயார்’

பாகான் டத்தோ மாவட்ட மன்றத்தை அமைக்க, பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவின்  ஒப்புதலைப் பெற துணைப் பிரதமர் டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி முனைந்துள்ளார்.

பாகான் டத்தோ மாவட்ட மன்றம் நிர்வகித்தால், இந்தப் பகுதியில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும் என்று பாகான் டத்தோ, சிம்பாங் அம்பாட்டில், சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்துகொண்ட ஜாஹிட் கூறினார்.

கடந்தாண்டு ஜனவரி 9-ல், தெலுக் இந்தான் மாநகர மன்றத்தின் நிர்வாகத்தின் கீழ், பேராக் மாநிலத்தின் 12-வது மாவட்டமாக பாகான் டத்தோ அறிவிக்கப்பட்டது.

பாகான் டத்தோ எம்.பி.-ஆக நீண்ட காலத்திற்குத் தான் இருக்கப் போவதில்லை என்றும், அந்த மாவட்ட முன்னேற்றத்தைத் தொடர, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்த முன்னேற்றம் எனக்கானது அல்ல. நான் எம்.பி. பதவியிலிருந்து விலகும் முன், பாகான் டத்தோ தொகுதியை மேம்படுத்த விரும்புகிறேன்.

“……ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், பகான் டத்தோ மக்களிடம் நிரூபித்துகாட்ட. என்னால் இத்தொகுதியில் சிறந்தவற்றைச் செய்ய முடியவில்லை என்றால், நான் பின்வாங்க தயாராக இருக்கிறேன்,” என்றார் அவர்.