மகாதிர்-ஓராங் அஸ்லி சந்திப்புக்குச் செல்வதைத் தடுக்க பணமும் பாட்டுமா?

 

இன்று பகாங், தாசிக் சின்னியில் மகாதிருக்கும் ஓராங் அஸ்லி சமூகத்திற்கும் இடையிலான சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களில் சுமார் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதே இடத்தில் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 500-க்கு மேற்பட்ட கிராம மக்களில் அதிகமானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் மக்கள் மலேசியாகினியிடம் கூறினார்.

கிராம மக்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றில் ஒன்று எஸ்கே தாசிக் சின்னியில். பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் ரொக்கம் ரிம100.

“உங்களுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தால், உங்களுக்கு ரிம 500 கிடக்கும். எனக்கு ஒரே பிள்ளைதான். அதனால் எனக்கு ரிம100 மட்டுமே கிடைத்தது என்று ஸாம்சாரி நூபி கூறினார்.

இன்னொருவர், முகம்மட் லாஸிம், பண அளிப்பு முடிந்தவுடன் 10 நிமிடத்திற்குள் சென்றடைந்துவிடக் கூடிய ஓர் இடத்தில் பாடல் (காரோக்கி) நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று கூறினார்.

மலேசியாகினி அங்கு சென்ற போது, அங்கு சுமார் 20 ஓராங் அஸ்லிகள் இருந்தனர்.

காரோக்கி நிகழ்ச்சியை அம்னோவின் உதவியோடு கம்போங் குமும் மற்றும் உலு குமும் கிராமக் குழுக்கள் ஏற்பாடு செய்தன என்று பெக்கான் அம்னோ ஓராங் அஸ்லி பிரிவுத் தலைவர் ஷகாருடின் அஹமட் கூறினார்.

மகாதிரின் நிகழ்ச்சிக்கு தாங்கள் போக விரும்பவில்லை, எங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர் என்று ஏன் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தீர்கள் என்று மலேசியாகினி கேட்ட போது, ஷகாருடின் பதில் அளித்தார்.

மாலையில், இந்த நிகழ்ச்சியின் உச்ச கட்டத்தில் சுமார் 200 ஓராங் அஸ்லிகள் காரோக்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். நன்கு பாடிய ஒவ்வொருவருக்கும் ரிம50 வழங்கப்பட்டது என்று ஷகாருடின் மேலும் கூறினார்.

இது ஒரு கேளிக்கை. நன்கு பாடியவர்களுக்கு பணம் கிடைத்தது. இன்றிரவு நடக்கும் நிகழ்ச்சியில் இன்னும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றாரவர்.

மகாதிரின் நிகழ்ச்சியில் 50 பேர்தான் இருந்தனர் என்றால். எந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது என்பதை அது காட்டுகிறது என்றாரவர்.

இந்த நிகழ்ச்சியை அம்னோவும் அரசாங்கமும் ஏற்பாடு செய்ததின் நோக்கம் மகாதிரின் பெக்கான் வருகையோடு மோதுவதற்காகவே என்று கூறப்படுவதை ஷகாருடின் மறுத்தார்.

நாங்கள் ஓராங் அஸ்லிகளுக்கு அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். 2013 ஆண்டிலிருந்து நாங்கள் சுறுசுறுப்பாக இச்சமூகத்திற்கு சேவை செய்து வருகிறோம் என்றாரவர்.

இன்று எஸ்கே சின்னி பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலா ரிம100 அளிக்கப்பட்டது ஒரு எதேச்சையான சம்பவம்.

இந்த ரொக்க பண உதவி கல்வி இலாகாவிடமிருந்து வருகிறது. பகாங்கிலுள்ள எல்லா பள்ளிகளுக்கும் கிடைக்கிறது. எனது குழந்தைகளுக்கும் கிடைத்துள்ளது. இம்முறை அது சற்று தாமதமாக வந்துள்ளது என்று ஷகாருடின் விளக்கம் தந்தார்.

முன்னதாக, தாசிக் சின்னி ஓராங் அஸ்லிகளிடம் பேசிய மகாதிர், ஓராங் அஸ்லிகள் எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் கேட்டறிந்து அவற்றை தீர்க்க பக்கத்தன் ஹரப்பான் முயலும் என்று கூறினார்.

தாசிக் சின்னியின் இன்றைய அவலநிலை மற்றும் சின்னி அணைக்கட்டு ஆகிய விவகாரங்கள் குறித்த ஓராங் அஸ்லிகளின் கவலையைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாதிர் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இந்த அணைக்கட்டு பிரச்சனைக்கு காரணமானவர் இந்த மகாதிர்தான் என்று ஷகாருடின் கூறினார்.