‘இரண்டும் இரண்டும் நான்கு என்று சொல்லும் சுதந்திரம்கூட இனி மலேசியர்களுக்கு இருக்காதுபோலும்’

பொய்செய்தித்   தடுப்புச்   சட்டம்  என்பது  மற்றொரு   அடக்குமுறை   கருவி   என்கிறார்  மலேசியாகினி   தலைமைச்  செய்தியாசிரியார்   ஸ்டீபன்   கான்.

மலேசியாகினியை   அதன்  தலைமைச்  செயல்  அதிகாரி   பிரமேஷ்   சந்திரனுடன்   கூட்டாக   நிறுவியவரான    கான்,    ‘1984’  நாவலில்  ஜார்ஜ்  ஆர்வெல்  கூறியிருந்ததை     நினைவு  கூர்ந்தார்.

“ஜார்ஜ்  ஆர்வெல்   எழுதினார்,  ‘சுதந்திரம்    என்றால்  இரண்டும்   இரண்டும்
நான்கு  என்று  சொல்லும்  சுதந்திரம்  வேண்டும்’  என்று.  மலேசியர்கள்  அந்தச்   சுதந்திரத்தையும்   இழக்கும்   நிலையில்   உள்ளனர்.

“மலேசியாவில்   பொய்ச்  செய்திகளை   எதிர்க்க  வண்டி  வண்டியாக   சட்டங்கள்   உண்டு. இப்புதிய   சட்டம்  அரசாங்கத்தின்  இன்னொரு  கட்டுப்பாட்டுச்  சட்டம்  என்பதற்கும்  மேலே,  இது    நொந்து  நூலாகியுள்ள  ஜனநாயகத்துக்குச்   சாவுமணி  அடிக்கிறது.

“அரசாங்கம்   எதைப்  பொய்ச் செய்தி  என்கிறதோ   அதுதான்  பொய்ச்   செய்தி.  இரண்டும்  இரண்டும்  நான்கல்ல   என்று   அரசாங்கம்   சொன்னால்   அதுதான்  சரி”,  என்றார்.

பிரமேஷும்   இது    ஊடகங்களையும்   பேச்சுச்  சுதந்திரத்தையும்  கட்டுப்படுத்தும்   முயற்சி   என்று   சாடினார்.

“கான்  கூறியதுபோல்  பொய்ச்  செய்திகளைக்  கட்டுப்படுத்த   போதுமான    சட்டங்கள்   உள்ளன.

“இது  பொய்ச்  செய்திகளைக்  கட்டுப்படுத்த   கொண்டுவரப்படும்   சட்டமாகத்   தெரியவில்லை.   அதிகாரத்தில்   உள்ளவர்களுக்கு எதிரான    தகவல்கள்    பரவுவதைத்  தடுக்கும்   நோக்கம்   கொண்ட   சட்டமாகத்   தெரிகிறது.

“மலேசியாவை   முன்னோக்கிக்   கொண்டு  செல்லப்போவதாகக்  கூறிய   நிர்வாகம்   இப்போது  பின்னோக்கிச்  செல்ல  முற்படுவதக்  காண   மனம்  வருந்துகிறது”,  என  பிரமேஷ்   கூறினார்.