தேர்தல் எல்லை மறுசீரமைப்பு: பி.எஸ்.எம். சிலாங்கூரில் தனது தொகுதிகளை மாற்றியமைக்க திட்டம்

அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் எல்லை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரில் போட்டியிடும் தனது முடிவை பி.எஸ்.எம் மறுபரிசீலனை செய்யவுள்ளது.

“உலு லங்காட் நாடாளுமன்ற நாற்காலி குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்யவுள்ளோம், அங்கு போட்டியிடலாமா இல்லை காஜாங் சட்டமன்றத்திற்கு மாறலாமா என்பதை இன்றிரவு முடிவு செய்வோம்,” என்று பி.எஸ்.எம். மத்திய செயலவை உறுப்பினர் எஸ். அருட்செல்வன் கூறியுள்ளார்.

முன்னதாக, உலு லங்காட் நாடாளுமன்றத்திற்கு பி.எஸ்.எம். வேட்பாளராக அவரின் பெயர்தான் முன்மொழியப்பட்டிருந்தது.

“காஜாங் சட்டமன்றம் உலு லங்காட்டிலிருந்து செர்டாங் நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பாங்கி எனப் பெயரிடப்பட்டுள்ளது. பண்டார் தெக்நோலோஜி காஜாங் மற்றும் சுங்கை ஜெலோக்கின் ஒரு பகுதி தற்போது காஜாங்கின் கீழ் வந்துள்ளது, ஆக, செமிஞ்சேவை இது ஒரு கிராமப்புறப் பகுதியாக்கிவிட்டது,” என்று அவர் பெரித்தா டெய்லியிடம் கூறியுள்ளார்.

“சுங்கை டூசுன் பகுதியிலிருந்து, பண்டார் மக்கோத்தா செராஸ் மற்றும் பண்டார் சுங்கை லோங் இரண்டும் வெளியேற்றப்பட்டுவிட்டன,” என்றார் அவர்.

கட்சி போட்டியிடவுள்ள மற்ற பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றியும் அருட்செல்வன் பேசினார்.

“கிள்ளான் துறைமுகத்தில், எங்கள் சேவை மையம் தற்போது கிள்ளான் துறைமுகத்தில் இல்லை. சுமார் 30% வாக்காளர்களும் அடுத்த தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். எங்கள் ஶ்ரீ மூடா வேட்பாளர் வேறு தொகுதிக்கு மாற்றப்படலாம்,” என்றார் அவர்.

தேர்தல் எல்லை மறுசீரமைப்புக்கு முன்னர், பி.எஸ்.எம். 2 நாடாளுமன்றங்கள் (சுபாங், உலு லங்காட்) 4 சட்டமன்றங்களில் (கிள்ளான் துறைமுகம், செமிஞ்சே, கோத்தா டாமான்சாரா, ஶ்ரீ முடா) போட்டியிடவிருந்தது.

கடந்த வாரம், தேர்தல் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்ட பின்னர், சுபாங் நாடாளுமன்றம் சுங்கை பூலோ என மாற்றியமைக்கப்பட்டதோடு; சட்டமன்றங்களும் வேறு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மாற்றப்பட்டன.

எல்லைகள் மறுசீரமைக்கப்பட்ட போதும், சுங்கை பூலோ மற்றும் கோத்தா டாமான்சாராவில் பி.எஸ்.எம். போட்டியிடக்கூடும் என அருட்செல்வன் தெரிவித்தார்.