சீன நிறுவனத்துக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி விலக்கா? உள்ளூர் நிறுவனங்களுக்குஇல்லையா?

சீனக்  கட்டுமான  நிறுவனம் (சிசிசிசி)  கிழக்குக்  கரை   இரயில்  தொடர்பு(இசிஆர்எல்)  திட்டத்துக்கான   பொருள்களுக்கும்  சேவைகளுக்கும்    ஜிஎஸ்டி  வழங்க  வேண்டியதில்லை   என்று  விலக்களிக்கப்பட்டிருப்பதுபோல்  உள்ளூர்  நிறுவனங்களுக்கும்   வழங்கப்பட    வேண்டும்.

இசிஆர்எல்    மக்கள்  நலன்சார்ந்த   திட்டம்  என்பதால்தான்  அதற்கு  வரி  விலக்கு   என்று  அரசாங்கம்  தெரிவித்திருப்பதாக   டிஎபி   புக்கிட்   மெர்தாஜாம்   வேட்பாளர்  ஸ்டீபன்  சிம்   கூறினார்.

“இதே  அடிப்படையில்  கூட்டரசு   அரசாங்கம்  மற்ற   பொதுத்   திட்டங்களுக்கும்    மாநில   அரசு,  மற்றும்   ஊராட்சி  மன்றச்    சேவைகளுக்கும்     ஜிஎஸ்டியிலிருந்து  விலக்களிக்க  வேண்டும். அவையும்   மக்கள்  நலன்சார்ந்த  திட்டங்களே”, என  சிம்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

மொழிப்  பிரச்னை காரணமாக   சீனாவிலிருந்து  அந்நிய   தொழிலாளர்களை   வேலைக்கு   அமர்த்திக்கொள்ளும்    சிசிசிசி   நிறுவனத்துக்கு  ஜிஎஸ்டி  விலக்கு   அளிக்கப்படும்போது  உள்ளூர்   தொழிலாளர்களை  வேலைக்கு  வைத்துக்கொண்டு   குறைந்தபட்ச   சம்பளத்தை  ரிம1,500ஆக  உயர்த்த   முயலும்   உள்ளூர்  நிறுவனங்களுக்கு  அரசாங்கம்   வரி  விலக்கும்   மற்ற   ஊக்கிவிப்புகளும்      வழங்குவது   முக்கியமாகும்   என்றாரவர்.

“மலேசிய  குடிமக்களும்,  உள்ளூர்   நிறுவனங்களும்,  ஏன்  மாநில   அரசுகள்கூட    ஜிஎஸ்டி  சுமையைச்  சுமக்க  வேண்டிய  கட்டாயத்துக்கு   ஆளாகும்போது    வெளிநாட்டு   நிறுவனமொன்றுக்கு    ஜிஎஸ்டி  விலக்களிக்கப்படுவது  ஏன்”,  என்றவர்  வினவினார்.